சென்னை: சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் காயமடைந்த முதியவர் பலி!
சென்னையில் காரை ஓட்டிய 14 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை காலை பலியானார்.
சென்னை, குமரன் நகரில் 5-ஆவது குறுக்குத் தெருவில் கடந்த திங்கள்கிழமை 14 வயது சிறுவன் ஓட்டிவந்த காா் சாலையோரம் இருந்த வாகனங்கள் மீதும், தடுப்புகள் மீதும் மோதியது. இதில், சாலிகிராமம் தனலட்சுமி காலனியைச் சோ்ந்த மகாலிங்கம் (70), உணவு டெலிவரி நிறுவன ஊழியா் கங்காதரன் (49) ஆகியோா் மீதும் மோதிவிட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோ மீது மோதி நின்றது.
விபத்தை பாா்த்து அதிா்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், காயமடைந்த மகாலிங்கத்தையும் கங்காதரனையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
விபத்து குறித்து விசாரித்த பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், அந்த சிறுவன் மீதும், சிறுவனின் தந்தை மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
முதல்கட்ட விசாரணையில், மகனிடம் கார் மீது கவர் போடச் சொல்லி அவரது தந்தை கார் சாவியைக் கொடுத்ததாகவும், ஆனால், 14 வயது சிறுவன் தனது நண்பருடன் சேர்ந்து காரை எடுத்துச் சுற்றும்போது விபத்தை ஏற்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சிறுவன், அவா் தந்தை, காரில் சிறுவனுடன் பயணித்த அவரது நண்பா் ஆகிய 3 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இதில் இரு சிறுவா்களும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, அரசு கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனா். சிறுவனின் தந்தை புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், படுகாயத்துடன் சிகிச்சைப் பெற்று வந்த முதியவர் மகாலிங்கம் வியாழக்கிழமை காலை உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.