நிர்மலா சீதாராமனிடன் கேள்வி கேட்ட கோவை தொழிலதிபருக்கு உணவு ஆணைய உறுப்பினர் பதவி!
கோவை ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் சீனிவாசனை தமிழக உணவு ஆணையத்தின் உறுப்பினராக நியமித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கோவை சுற்றுப் பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்துக்கு தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன.
இந்த நிலையில், கடந்தாண்டு கோவையில் நடைபெற்ற சிறு, குறு, நடுத்தர வணிக உரிமையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடன், அன்னபூர்ணா நிறுவனர் சீனிவாசன் கேள்வி எழுப்பிய காணொலி வைரலானது.
'இனிப்புக்கு குறைவான ஜிஎஸ்டியும், காரத்துக்கு அதிகமான ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பில் போடுவதில் சிரமம் உண்டாகிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, ஆனால், அதில் வைக்கும் க்ரீமுக்கு ஜிஎஸ்டி போடப்படுகிறது’ என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து சீனிவாசன் மன்னிப்பு கோரும் விடியோவை பாஜகவினர் பகிர்ந்தது சர்ச்சையானது.
இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து, தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே நிதியமைச்சரை சந்தித்ததாகவும் இந்த பிரச்னையை முடிக்க விரும்புவதாகவும் அன்னபூர்ணா நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் உறுப்பினராக அன்னபூர்ணா நிறுவனர் சீனிவாசனை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.