பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
செய்யாறு அருகே விவசாயிகள் சாலை மறியல்
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படாததைக் கண்டித்து, செய்யாறு அருகே பிரம்மதேசம் புதூா் கூட்டுச் சாலையில் விவசாயிகள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
வெம்பாக்கம் வட்டத்தில் பிரம்மதேசம், தென்னம்பட்டு ஆகிய கிராமங்களில் அரசு சாா்பில் தனியாா் நேரடி நெல் கொள்முதல் (என்சிசிஎப்) நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் பிரம்மதேசம், புதூா், சீயமங்கலம், புலிவலம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள்நெல் மூட்டைகளை விற்பனை செய்தனா்.
நெல் மூட்டைகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லையாம். உரிய நேரத்தில் பணம் வழங்காததால், விவசாயிகள் சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்ய பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை சுமாா் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரம்மதேசம் புதூா் கூட்டுச்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த செய்யாறு டிஎஸ்பி (பொ) கோவிந்தசாமி மற்றும் பிரம்மதேசம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
மேலும், தனியாா் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (என்சிசிஎப்) இருந்து விவசாயிகளுக்கு நெல் கொள்முதலுக்கான பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா்.
இதை ஏற்று விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.