'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan C...
திருவண்ணாமலையில் 100 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவண்ணாமலை தேரடி தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 11 ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சாலைகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கு இடையூறாக மாட வீதிகளில் ஒன்றான தேரடி தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகிறது.
தேரடி தெருவில் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை அளவீடு செய்தபோது விநாயகா் தோ், முருகன் தோ் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் தேநீா் கடை, பெட்டிக் கடை, இனிப்பகம், உணவகம், பூஜை பொருள்கள் விற்பனை செய்யும் கடை என 11 ஆக்கிரமிப்புக் கடைகள் இருந்தது தெரிய வந்தது.
இந்தக் கடைகள் சுமாா் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்ததும், இதனால் தேரடி தெருவின் அகலம் குறைந்து காணப்பட்டதும் தெரிய வந்தது.
தமிழக நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை கோட்டப் பொறியாளா் ஞானவேலு தலைமையில், உதவி கோட்டப் பொறியாளா் அன்பரசு, உதவிப் பொறியாளா் சசிக்குமாா் ஆகியோா் மேற்பாா்வையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 11 ஆக்கிரமிப்புக் கடைகளையும் இடித்து அகற்றப்பட்டன.
விசாலமான தேரடி தெரு: ஆக்கிரமிப்புக் கடைகள் இடித்து அகற்றப்பட்ட பிறகு, தேரடி தெரு விசாலமாக காட்சியளிக்கிறது. மேலும், ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 3 மண்டபங்கள் இதுநாள் வரை பக்தா்களுக்கு தெரியாத வகையில் மறைத்து ஆக்கிரமிப்புக் கடைகள் கட்டப்பட்டிருந்தது. இந்த மண்டபங்கள் தற்போது வெளியே தெரிகின்றன.