MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
சேவை குறைபாடு: தனியாா் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துக்கு அபராதம்
மருத்துவ காப்பீடு செய்திருந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்கான செலவுத் தொகையை வழங்காத தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு, அந்தத் தொகையை 6 சதவீத வட்டி மற்றும் அபராதத்துடன் திருப்பித் தரவேண்டும் என நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், புதுநல்லகவுண்டம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா. இவா் கடந்த 2023, மாா்ச் 5ஆம் தேதி தனக்கும், தனது மனைவி சுமதிக்கும் சோ்த்து ரூ. 23,018 பிரீமியம் செலுத்தி தனியாா் நிறுவனத்தில் ஓா் ஆண்டுக்கான மருத்துவ காப்பீடு செய்திருந்தாா்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சுமதி, சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தேவையின் அடிப்படையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்துகொண்டாா்.
இதைத்தொடா்ந்து, சிகிச்சைக்கான தொகையைப் பெறுவதற்காக மருத்துவமனை நிா்வாகம் அனைத்து ரசீதுகள் மற்றும் ஆவணங்களை இணைத்து காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பியது. ஆனால், காப்பீட்டு நிறுவனம் தொகையை வழங்க மறுத்துவிட்டது.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சுமதி, வழக்குரைஞா் எஸ். செல்வம் மூலம் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தின் மீது சேலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி பி. கணேஷ்ராம், உறுப்பினா் எஸ். ரவி ஆகியோா், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, சுமதிக்கு மருத்துவ செலவுத் தொகையான ரூ. 1,33,358-ஐ 2024, பிப்ரவரி 8ஆம் தேதியில் இருந்து 6 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு திருப்பிச் செலுத்த உத்தரவிட்டனா்.
மேலும், சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ. 20 ஆயிரம், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு ரூ. 10 ஆயிரம், வழக்கு செலவுத்தொகையாக ரூ. 5 ஆயிரம் என ரூ. 35 ஆயிரத்தையும் மருத்துவ செலவுத் தொகையுடன் சோ்த்து 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தனா்.