தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
சைக்கிளில் தாயத்து விற்ற பாபா வங்கிக்கணக்கில் ரூ.106 கோடி - மதமாற்றத்துக்காக வந்த பணமா?
உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் மதமாற்றத்தில் ஈடுபட்ட ஜமாலுதின் என்ற சாங்கூர் பாபாவின் செயல்பாடுகளை மாநில தீவிரவாத தடுப்புப்படை தீவிரமாக கண்காணித்து வந்தது. அவர் லக்னோவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருப்பதாக தீவிரவாத தடுப்புபடைக்கு தகவல் கிடைத்தது. உடனே தீவிரவாத தடுப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சாங்கூர் பாபா மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளி நஸ்ரீன் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் தீவிரவாத செயல்கள் எதிலும் ஈடுபட்டனரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அமலாக்கப்பிரிவும் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. சாங்கூர் பாபா கைது செய்யப்பட்டு இருப்பது குறித்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஏழைகள், ஆதரவற்ற கூலித்தொழிலாளர்கள், நலிவடைந்தவர்கள், விதவை பெண்களை குறிவைத்து அவர்களுக்கு நிதியுதவி, பொருளாதார உதவிகள் செய்து கொடுத்தும், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தும் கட்டாய மதமாற்றத்தில் இக்கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளனர்.

சாங்கூர் பாபாவின் வங்கிக் கணக்கிற்கு எங்கிருந்து பணம் வந்தது என்பது குறித்து போலீஸாரும், அமலாக்கப்பிரிவினரும் விசாரித்து வருகின்றனர். அதோடு சாங்கூர் பாபாவிற்கு யார் என்ன காரணத்திற்காக பணம் அனுப்பி இருக்கின்றனர் என்பது குறித்தும் விசாரித்து வருகிறனர். சாங்கூர் பாபா ஒரு காலத்தில் சைக்கிளின் சென்று மோதிரம், தாயத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு அவரது கிராமத்து தலைவராக மாறினார். ஆனால் இப்போது சாங்கூர் பாபாவின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்தபோது அவருக்கு 40 கணக்குகள் இருப்பது தெரிய வந்தது. மேலும் அவரது வங்கிக்கணக்குகளில் 106 கோடி ரூபாய் அளவுக்கு பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பணமும் மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் இருந்து வந்திருந்தது. மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி முஸ்லிம் நாடுகளில் இருந்து பணம் வசூலித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ரஹ்ரா மாபி என்ற கிராமம் தான் சாங்கூர் பாபாவின் சொந்த ஊர் ஆகும். நேபாள எல்லையையொட்டி இருக்கும் இக்கிராமத்தில் இருந்து கொண்டு வங்கிக்கணக்கிற்கு ரூ.106 கோடியை வரவைத்துள்ளார்.
அதோடு தனது கிராமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவியில் உள்ள மத்பூர் என்ற கிராமத்தில் தர்காவிற்கு அருகில் ஒரு கட்டடம் கட்டினார். அதன் மதிப்பு மூன்று கோடியாகும். கட்டடம் முழுக்க 15 கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சாங்கூர் பாபாவும், அவரது குடும்பத்தினரும் வசிக்க ஏதுவாக இந்த கட்டடம் கட்டப்பட்டது. அதில் ஒரு பகுதியில் சாங்கூர் பாபா வசித்து வந்தார். ஆனால் அந்த கட்டடம் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பலத்த பாதுகாப்புடன் புல்டோசர் துணையோடு அக்கட்டடத்தை இடித்து தள்ளியது. அக்கட்டிடம் கட்டப்படும்போது அது மருத்துவமனை என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு அதில் பள்ளி செயல்படும் என்று கூறப்பட்டது. ஆனால் எதுவும் செயல்படவில்லை. இரண்டு நாய்கள் மட்டும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தது.

அந்த சொத்து நஸ்ரீன் என்பவரின் பெயரில் இருந்தது. அக்கட்டடத்தை இடிக்கும் முன்பு மூன்று முறை மாவட்ட நிர்வாகம் நஸ்ரீனுக்கு நோட்டீஸ் கொடுத்திருந்தது. ஆரம்பத்தில் சாங்கூர் பாபா நிலத்தை அபகரித்து கொண்டதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அதனை தொடர்ந்து விசாரித்தபோது அனைத்து உண்மைகளும் வெளியில் வந்தது. சாங்கூர் பாபாவிற்கு உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாது மகாராஷ்டிராவின் லோனவாலாவிலும் சொத்துக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. விசாரணை ஏஜென்சிகள் இதுவரை சாங்கூர் பாபாவும், அவரது கூட்டாளியும் சேர்ந்து எத்தனை பேரை மதமாற்றம் செய்துள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இது வரை 40 பேரை மதமாற்றி இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.