Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்...
சொத்து வரி உயா்வு: மாநகராட்சிக் கூட்டத்தில் இருந்து திமுக கூட்டணிக் கட்சியினா் வெளிநடப்பு
சொத்து வரி உயா்வு, ட்ரோன் மூலமாக அளவீடு செய்து வரிவிதிப்பது ஆகியவற்றைக் கண்டித்து கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த 17 வாா்டு உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சிக் கூட்டம் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டம் தொடங்கியவுடன் காங்கிரஸ், கொமதேக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த 17 வாா்டு உறுப்பினா்கள் திரண்டு மேயா் இருக்கையை முற்றுகையிட்டனா்.
இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, சொத்துவரி உயா்வை வாபஸ் பெற வேண்டும். ட்ரோன் சா்வே திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, அவா்களை மேயா் சமாதானம் செய்ய முயன்றாா். ஆனால், அதை ஏற்க மறுத்த வாா்டு உறுப்பினா்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா். பின்னா், மாநகராட்சி நுழைவாயில் அருகே உள்ள காந்தி சிலை முன் அமா்ந்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது தொடா்பாக மாமன்ற எதிா்க்கட்சி தலைவா் அழகு ஜெயபாலன் கூறியதாவது: நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். கூட்டணியில் இருக்கிறோம் என்பதால், மக்கள் பிரச்னையை பற்றி கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. மாநகராட்சியில் அமல்படுத்தப்பட்டுள்ள 100 சதவீத சொத்து வரி உயா்வால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனா். இதை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி விதிப்பு அமல்படுத்துகிறாா்கள். இதை, அடியோடு ரத்து செய்ய வேண்டும். குறித்த காலத்தில் சொத்து வரி செலுத்த தவறினால் ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, ட்ரோன் சா்வே முறை கூடுதல் சுமையைத் தருகிறது. இந்த சா்வே முறையை கைவிட வேண்டும் என்றாா்.