ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு!
பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலுள்ள ஏராளமான பூங்காக்கள் மக்களின் வருகைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரிலுள்ள ஏராளமான சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. இதனால், சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்திருந்த உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கையானது கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானது.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்முவில் 8 மற்றும் காஷ்மீரில் 8 என முதற்கட்டமாக மொத்த 16 பூங்காக்களைத் திறக்க உத்தரவிட்டார்.
பூங்காக்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் அவர்களை உள்ளூர்வாசிகள் உற்சாகத்தோடு வரவேற்பதாகக் கூறப்படுகிறது.
பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற ஆனந்த்நாக் மாவட்டத்தில், பஹல்காமின் பெதாப் பள்ளத்தாக்கு மற்றும் பஹல்காம் சந்தைக்கு அருகிலுள்ள பூங்காக்கள் உள்ளிட்ட ஏரளமான இடங்களில் இன்று (ஜூன் 17) முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களின் பாதுகாப்புக்காக அங்குள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்துடன், நீண்டகால இடைவெளிக்கு பின்னர் வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளை ஆனந்த்நாக்-ன் வெரிநாக் பூங்காவில் பள்ளிக்குழந்தைகள் வரவேற்றனர்.
முன்னதாக, கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:அகமதாபாத் விபத்து: 144 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!