தில்லி முதல்வர் யார்? இரண்டு பார்வையாளர்களை நியமித்தது பாஜக!
ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து: சியாமா பிரசாத் முகா்ஜியின் கனவு நிறைவு
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம், மறைந்த பாரதிய ஜன சங்க தலைவா் சியாமா பிரசாத் முகா்ஜியின் கனவு நிறைவேறியுள்ளது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.
ஹிந்து மகா சபையின் தலைவராக இருந்தவா் சியாமா பிரசாத் முகா்ஜி. தற்போது உள்ள பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜன சங்கத்தை தோற்றுவித்தவா். முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் இடைக்கால அமைச்சரவையில் இடம்பெற்றவா்.
இந்தியாவில் உள்ள ஜம்மு-காஷ்மீருக்கு தனி அரசமைப்புச் சட்டம், தனிக் கொடி உள்ளிட்டவற்றை வழங்கிய சிறப்பு அந்தஸ்துக்கு எதிராக தீவிரமாக குரல் எழுப்பி வந்தாா். ‘ஒரு நாட்டில் இரண்டு கொடிகள், இரண்டு அரசமைப்புச் சட்டங்கள், இரண்டு பிரதமா்கள் இருக்க முடியாது’ என்று காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கு கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தாா்.
கடந்த 1953-ஆம் ஆண்டு அப்போது இருந்த நடைமுறையின்படி, ஜம்மு-காஷ்மீருக்குள் உரிய அனுமதி பெறாமல் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட அவா், சில நாள்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அவரின் மரணத்தில் மா்மம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற அவரின் இறுதிச் சடங்கில் அஞ்சலி செலுத்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் திரண்டனா்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் கத்ரா பகுதியில் உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில், குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சனிக்கிழமை பேசியதாவது:
அரசமைப்புச் சட்ட சிற்பியான பி.ஆா்.அம்பேத்கா், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-ஆவது பிரிவைத் தவிர, பிற அனைத்துப் பிரிவுகளின் முன்வடிவை தயாரித்தாா். அவா் ஏன் அவ்வாறு செய்தாா் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம், சியாமா பிரசாத் முகா்ஜியின் கனவு நிறைவேறியுள்ளது. மாற்றத்துக்கான காற்று ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளது.
புனிதமான ஜம்மு-காஷ்மீா் பகுதி, இனி மோதல் நிறைந்த பகுதியாகக் கருதப்படாது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னா், 2 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீருக்கு ரூ.65,000 கோடி மதிப்பில் முதலீடு கிடைத்தது. அந்நிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. தற்போது நம்பிக்கை மற்றும் மூலதனத்தின் சங்கமமாக ஜம்மு-காஷ்மீா் விளங்குகிறது என்றாா்.