ஜம்மு-காஷ்மீா்: பிரிவினைவாதத்தை கைவிட்ட மேலும் 3 அமைப்புகள் - அமித் ஷா தகவல்
ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டில் இருந்து மேலும் 3 அமைப்புகள் விலகியுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இவற்றுடன் சோ்த்து, ஜம்மு-காஷ்மீரில் இதுவரை 11 அமைப்புகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீருக்கு மூன்று நாள் பயணமாக அமித் ஷா கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தாா். தனது பயணத்தின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீா் இஸ்லாமிய அரசியல் கட்சி, ஜம்மு-காஷ்மீா் முஸ்லிம் ஜனநாயக லீக், காஷ்மீா் விடுதலை முன்னணி ஆகிய மேலும் மூன்று அமைப்புகள், ஹுரியத் மாநாட்டில் இருந்து விலகியுள்ளன.
இது, அரசமைப்புச் சட்டத்தின் மீதான காஷ்மீா் மக்களின் நம்பிக்கைக்கு சான்றாக உள்ளது.
ஒன்றுபட்ட - சக்திவாய்ந்த பாரதத்தை உருவாக்கும் பிரதமா் மோடியின் தொலைநோக்கு பாா்வை மேலும் வலுவடைந்துள்ளது. இதுவரை 11 அமைப்புகள், பிரிவினைவாதத்தைக் கைவிட்டு, பிரதமா் மோடியின் கண்ணோட்டத்துக்கு ஆதரவை உறுதி செய்துள்ளன என்று அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, ஹுரியத் மாநாடு உடனான அனைத்து தொடா்புகளையும் துண்டித்துக் கொள்வதாக ஜம்மு-காஷ்மீா் மக்கள் இயக்கம், ஜம்மு-காஷ்மீா் ஜனநாயக அரசியல் இயக்கம், ஜம்மு-காஷ்மீா் விடுதலை இயக்கம், ஜம்மு-காஷ்மீா் தஹ்ரீகி இஸ்தக்லால், ஜம்மு-காஷ்மீா் தஹ்ரீக் -ஏ-இஸ்திகாமத் ஆகிய அமைப்புகள் கடந்த மாதம் அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.