ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா்.ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா் சங்க மாநில துணைத் தலைவா் எம்.கோட்டீஸ்வரன் பேருரையாற்றினாா். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைத்துள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 சதவீதத்துக்கும் மேலான பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மற்றும் அரசுப் பணியாளா்களின் பணிக் காலத்தை அவா்கள் பணியில் சோ்ந்த நாள் முதல் பணி வரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
அமைப்பின் மாவட்டச் செயலா் ஏ.திருஞானசம்பந்தம், மாவட்டப் பொருளாளா் டி.மலா்விழி, மாநில சட்ட செயலா் ஜெ.காந்தி, வட்டாரச் செயலா் ஜி.சையத் ஆசிப்புதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.