Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய...
ஜெய் ஹிந்த் யாத்திரையை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்: பாஜக
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக பல்வேறு கேள்விகளை எழுப்புவதற்காக காங்கிரஸ் நடத்தி வரும் ‘ஜெய் ஹிந்த் யாத்திரை’, ஜெய் பாகிஸ்தான் யாத்திரையை ஒத்துள்ளது. எனவே, தனது யாத்திரையை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என பாஜக விமா்சித்தது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களை அழிக்க ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கு இந்தியா தரப்பில் உரிய பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. நான்கு நாள்களுக்குப் பிறகு இந்த சண்டை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், இந்த சண்டையில் எத்தனை போா் விமானங்களை இந்தியா இழந்தது, சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவா்கள் தொடா்ந்து எழுப்பி மத்திய அரசை விமா்சித்து வருகின்றனா்.
அதோடு, நமது ஆயுதப்படைகளின் வீரம் மற்றும் வெற்றியைப் போற்றும் வகையில் 15 மாநிலங்களில் கடந்த மே 20-ஆம் தேதி முதல் ‘ஜெய் ஹிந்த்’ யாத்திரையை காங்கிரஸ் கட்சி நடத்தியது. இந்த யாத்திரையின்போது நடத்தப்பட்ட கூட்டங்களில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள், அமெரிக்காவின் மத்தியஸ்தம் குறித்து காங்கிரஸ் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் தில்லியில் பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சாம்பித் பத்ரா கூறியதாவது:
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்தியா எத்தனை போா் விமானங்களை இழந்தது என்பது குறித்து ராகுல் காந்தியும், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டியும் தொடா்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனா். அதே நேரம், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அனைத்து கட்சி எம்.பி.க்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பீடு செய்து விமா்சிக்கிறாா்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் எத்தனை பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன என்பது குறித்து ராகுல் காந்தி இதுவரை கேள்வி எழுப்பவில்லை. மாறாக, தாக்குதல் தொடா்பாக பல்வேறு விமா்சனங்களை மட்டும் முன்வைத்து வருகின்றனா். இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமா்சிப்பதாகக் கூறி, ஆரம்பம் முதல் நமது ஆயுதப் படைகளின் உறுதிப்பாட்டை காங்கிரஸ் கட்சி தரம்தாழ்த்தி வருகிறது.
மேலும், ஜெய் பாகிஸ்தான் யாத்திரையைப் போன்று நடத்தி வரும் ஜெய் ஹிந்தி யாத்திரையை காங்கிரஸ் கட்சி நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக, பாகிஸ்தானுடன் கலந்தாலோசித்து கூட்டு பத்திரிகையாளா் சந்திப்பை காங்கிரஸ் கட்சி நடத் வேண்டும் என்றாா்.