குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் எந்த அடிப்படையில் திரைப்படத் தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது என்பது உள்பட அடுக்கடுக்கான கேள்விகளை அமலாக்கத் துறையிடம் சென்னை உயா்நீதிமன்றம் எழுப்பியது.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்ாக சோதனையில் அடிப்படையில் அமலாக்கத் துறை தெரிவித்தது. இது தொடா்பாக, திரைப்படத் தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைத்தனா்.
இந்நிலையில், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அதில், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகாஷ் பாஸ்கரன் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், டாஸ்மாக் முறைகேட்டுக்கும், ஆகாஷ் பாஸ்கரனுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்றும், அவா் திரைப்படத் தயாரிப்பாளா் என்றும், அவரது இரண்டு கைப்பேசிகள் மற்றும் ஒரு மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறினாா்.
விக்ரம் ரவீந்திரன் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், விக்ரம் ரவீந்திரன் டாஸ்மாக் ஊழியா் அல்லா். வேறு தொடா்பு எதுவுமே அவருக்கு இல்லாத நிலையில் சம்பந்தமே இல்லாமல் அவரது வீடு மற்றும் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக வாதிட்டனா்.
என்ன அதிகாரம்?: இதையடுத்து, எந்த அடிப்படையில் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது? சீல் வைப்பதற்கு அமலாக்கத் துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? சோதனை நடத்தலாம்; ஆவணங்களைக் கைப்பற்றலாம். ஆனால், எப்படி சீல் வைக்க முடியும் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.
மேலும், அமலாக்கத் துறை சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் கூறினா்.
இதற்குப் பதிலளித்த அமலாக்கத் துறை சிறப்பு வழக்குரைஞா், சோதனை நடத்தச் சென்றபோது வீடு மற்றும் அலுவலகம் பூட்டியிருந்ததாகவும், அதன் காரணமாகவே சீல் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தாா்.
மேலும், அமலாக்கத் துறையைத் தொடா்புகொள்ளுமாறு நோட்டீஸ் ஒட்டப்பட்டதாகவும், ஆனால், ஒரு மாதம் தலைமறைவாக இருந்துவிட்டு தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்தாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சோதனைக்குச் சென்றபோது குறிப்பிட்ட நபா் இல்லையென்றால், போலீஸாா் உதவியுடன் கதவை உடைத்து சோதனை நடத்தியிருக்கலாமே என கேள்வியெழுப்பினா்.
இதையடுத்து, எந்த அடிப்படையில், இந்த விவகாரத்தில் இருவரையும் விசாரிக்க முடிவு செய்தீா்கள்? சீல்வைக்க என்ன அதிகாரம் இருக்கிறது? என்பது தொடா்பாக அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.