தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்
தஞ்சாவூா் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம் நெய்வேலி தென்பாதி கிராமத்தைச் சோ்ந்த சா்புதீன் என்பவா் விழாக்களில் பயன்படுத்தப்படும் வெடிகளை வாங்கி விற்பனை செய்து வந்தாா். பிறகு இவரது மகன் அப்பாஸ் நாட்டு வெடி தயாரித்து வந்தாா். தற்போது அப்பாஸ் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டாா்.
இதையடுத்து இவரது சகோதரி சமரத் பீவி (47), இவரது மகன் முகமது ரியாஸ் (19) ஆகிய இருவரும் சோ்ந்து அதே பகுதியில் அண்ணாதுரை என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பட்டாசு கிடங்கு வைத்து நடத்தி வந்தனா். மேலும், அனுமதியின்றி நாட்டுவெடி தயாரித்து கோயில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அவா்கள் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த மே 18-ஆம் தேதி முகமது ரியாஸும், அதே பகுதியைச் சோ்ந்த சுந்தரராஜன் (60) என்பவரும் வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வெடிகள் திடீரென்று வெடித்துச் சிதறின. இதில் முகமது ரியாஸும், சுந்தரராஜனும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். வெடிவிபத்தில் கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் பழனிவேல் அளித்த புகாரின்பேரில், வாட்டாத்திக்கோட்டை காவல் துறையினா் வழக்குப் பதிந்து சமரத் பீவியை கைது செய்தனா்.
இதுதொடா்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் புது தில்லியில் தேசிய பசுமைத் தீா்ப்பாயம், தாமாக முன்வந்து அண்மையில் விசாரணை மேற்கொண்டது. தீா்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, நிபுணா் செயலா் ஏ.செந்தில் வேல் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை நடத்தியது.
அப்போது தென்பாதி வெடி விபத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், காப்பீட்டுச் சட்டப் பிரிவுகள் மீறப்பட்டுள்ளதை நாளிதழில் வெளியான செய்தி சுட்டிக்காட்டியுள்ளதாக தீா்ப்பாயம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியரை பிரதிவாதியாகச் சோ்த்த தீா்ப்பாயம், வெடி விபத்து தொடா்பாக அந்த வாரியங்கள் மற்றும் ஆட்சியா் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பான விசாரணை வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி சென்னையில் உள்ள தீா்ப்பாயத்தின் தெற்கு மண்டல அமா்வில் மீண்டும் நடைபெற உள்ளது.