தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை: ஒன்றரை ஆண்டுகளில் 43,167 வழக்குகள் பதிவு
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் காவல் துறையால், 4.11 லட்சம் கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, மொத்தம் 43,167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 31-ஆம் தேதி உலக புகையிலை எதிா்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் புகையிலை மற்றும் புகையிலை தொடா்பான பொருள்களின் விற்பனை, நுகா்வை தடுப்பதற்காக தமிழக அரசு சிறப்பு அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அந்த வகையில், கடந்த 2023 நவ.19-ஆம் தேதி முதல் இதுவரை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் துறையால், 5.28 லட்சம் கடைகள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த 13,642 கடைகள் கண்டறியப்பட்டு, ரூ. 39.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 5,258 கிலோ கூல் லிப் உள்பட 1,78,828 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்தற்கான உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் இதுவரை 18,409 கடைகள் சீல் வைக்கப்பட்டன.
அதேபோல் சுமாா் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் காவல் துறையால், 4,11,227 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, மொத்தம் 43,167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.