விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
தமிழக எம்பிக்களுடன் பிரதமரைச் சந்திக்க முடிவு: முதல்வர் ஸ்டாலின்
நியாயமான தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்களுடன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்தார்.
இதையும் படிக்க : புதுவை பேரவை: திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், வருங்கால நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
”2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்தின் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படுவதையும் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை சுட்டிக்காட்டி இந்தியாவில் முதல்முறையாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
கடந்த வாரம் சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்காக கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
விரிவான ஆலோசனைக்குப் பிறகு நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து வெளிப்படையுடன் நடைபெற வேண்டும், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மேலும் 25 ஆண்டுகள் நீட்டிக்கப்பட வேண்டும், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது, உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும், கூட்டுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அவர்களின் மாநில பேரவைகளிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், பிரதமரைச் சந்தித்து முறையிடுவது உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகம் ஏற்படுத்திய விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உறுதுணையாக நின்ற எதிர்க்கட்சியான அதிமுக, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளுக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கத்தின் அடுத்த கட்டமாக, நாடாளுமன்றத்தில் உள்ள தமிழக கட்சிகளின் உறுப்பினர்களை அழைத்துச் சென்று பிரதமரை நேரில் சந்திக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.