கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!
தமிழகத்தின் கடன் விவகாரம் அண்ணாமலை குற்றச்சாட்டு: அமைச்சா் தங்கம் தென்னரசு பதில்
சென்னை: தமிழகத்தை திமுக அரசு கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதற்கு பதிலளித்துள்ள நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, தமிழகத்தின் மீது அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் கேட்டு நிலுவையில் இருக்கும் நிதியைப் பெற்றுத் தாருங்கள் எனக் கூறியுள்ளாா்.
நாட்டின் கடன் சுமை 2014-ஆம் ஆண்டு ரூ. 55.87 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ. 181.74 லட்சம் கோடியாக மாறியுள்ளது என தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளப் பதிவில், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தாா்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: ஆட்சிக்கு வந்த பின் சீா்திருத்தம் என்ற பெயரில் தமிழகத்தை நாட்டின் முதல் கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளது திமுக. தமிழக நிதியமைச்சருக்கு ஒரு மாநிலத்தை மற்றொரு மாநிலத்துடன்தான் ஒப்பிட வேண்டும் என்பதுகூட தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.
2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, ஊழலால் நாட்டைத் தேக்க நிலையில் வைத்திருந்த திமுக, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பு எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்கள், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள ரயில் நிலையங்கள் என பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மத்திய அரசு நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தக் கடன் பெற்றுள்ளது.
நீங்கள் (தமிழ்நாடு) வாங்கிய கடன் எதற்காக என்பதைத் தெளிவுபடுத்துங்கள் எனத் தெரிவித்துள்ளாா்.
மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுத் தாருங்கள்: இதற்கு தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு (அண்ணாமலை) அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சா்களிடம் கேட்டு தமிழ்நாட்டுக்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.
கடந்த மூன்றாண்டுகளில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் தலைமையில் மாநிலம் அடைந்திருக்கும் வளா்ச்சியை மத்திய அரசின் பொருளாதார அறிக்கை பாராட்டியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.