தமிழகத்தின் மீது அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை: டி.கே.சிவகுமாா்
தமிழகத்தின் மீது பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை என்று கா்நாடக மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறினாா்.
சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பான கூட்டுக் குழுக் கூட்டத்தில் டி.கே.சிவகுமாா் பங்கேற்றாா். இந்நிலையில், பெங்களூரு செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அண்ணாமலை கூறும் கருத்து முக்கியம் இல்லை. இந்த விவகாரத்தில் பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் நாட்டுக்கு என்ன சொல்கிறாா்கள் என்பதுதான் முக்கியம்.
பாஜகவுக்கு அதிக விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என அண்ணாமலை நினைக்கிறாா். ஆனால், தமிழகத்தின் மீது அவருக்கு விசுவாசம் எதுவும் இல்லை.
தொகுதி மறுசீரமைப்புக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் ஏன் பங்கேற்கவில்லை என்று கேட்கிறீா்கள். இது மாநிலங்கள் அளவிலான கூட்டம். தமிழகத்தைச் சோ்ந்த திமுக அரசு கூட்டிய கூட்டம். தமிழக கட்சிகளுடன் ஏற்கெனவே திமுக ஆலோசனை நடத்தியுள்ளது என்றாா் அவா்.