மது பாட்டில் 1 வாங்கினால் 1 இலவசமா? பாஜகவிடம் அதிஷி கேள்வி!
உத்தரப் பிரதேசத்தில் பல மதுபானக் கடைகளில் ’மது பாட்டில் 1 வாங்கினால் 1 இலவசம்' என்று அறிவித்தது பற்றி பாஜகவிடம் ஆம் ஆத்மி தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பல இடங்களில் மதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
அதற்கான காரணம் என்னவென்றால், அங்குள்ள பல மதுபானக் கடைகளில் ’1 வாங்கினால் 1 இலவசம்’ என்ற சலுகை தரப்பட்டுள்ளது.
இதுபற்றி தில்லி எதிர்க் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அதிஷி இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
அப்போது, ”பாஜக ஆளும் உ.பி.யில் உள்ள பல மதுபானக் கடைகளில் கூட்டநெரிசல் ஏற்படும் அளவு மக்கள் கூடும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ஏனென்றால், யோகி ஆதித்யநாத் அரசு ’மதுபாட்டில் 1 வாங்கினால், 1 இலவசம்’ என்று சலுகை வழங்கியுள்ளது. அண்டை மாநில மக்களும் அங்கு சென்று நெரிசலில் சிக்கிய விடியோக்கள் வெளிவந்துள்ளன.
பாஜக அரசு உ.பி. மட்டுமின்றி அண்டை மாநில மக்களையும் குடிப் பழக்கத்திற்கு அடிமையாக மாற்ற நினைக்கிறதா? யோகி ஆதித்யநாத் மத்திய அரசின் ஒப்புதலுடன்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாரா?
இது உங்களின் அனுமதியின்றி நடைபெற்றால் இந்த அவலத்தை எதிர்த்து பாஜக தெருவில் இறங்கி போராடுமா?
1 வாங்கினால் 1 இலவசம் என்பதை பாஜக அரசு ஊழல் என்று குறிப்பிடும். அப்படியென்றால் இந்த விவகாரத்தில் யோகியின் அலுவலகத்தில் சிபிஐ, ஈடி போன்ற அமைப்புகள் எப்போது சோதனை நடத்தும்? ” என அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.