தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்த தில்லி துணைநிலை ஆளுநர்!
கர்நாடகத்திற்குப் பயணம் மேற்கொண்ட தில்லி துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனா, உதகையில் பழங்குடி சமூகத்தினரான தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.
தில்லி துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனா உதகையில் உள்ள தோடர் பழங்குடி கிராமத்திற்கு நேற்று வருகை தந்திருந்தார். அங்கு அவர் மூங்கில் தோட்டத்தைத் திறந்துவைத்தார். பகல்கோடு மந்து பகுதிக்குச் சென்ற அவர் பழங்குடியினரின் உற்பத்தி பொருள்கள் வைக்கப்பட்ட அங்காடியைப் பார்வையிட்டார்.
அதன்பின்னர், துணைநிலை ஆளுநர் தோடர் பழங்குடியின மக்களுடன் வட்டமாகச் சுற்றி வந்தும், கைத்தட்டிம் நடனமாடியும் மகிழ்ந்தார். இந்த விடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. பின்னர், பைக்காரா படகு இல்லத்துக்குச் சென்று படகு சவாரி செய்தார்.
இந்த மாத தொடக்கத்தில், தலைநகரில் தில்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா மற்றும் முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் தேசிய தலைநகரில் உள்ள பால்ஸ்வா நிலப்பரப்பில் மூங்கில் தோட்ட இயக்கத்தைத் தொடங்கினர். மீட்டெடுக்கப்பட்ட நிலத்தைப் பசுமை மண்டலமாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்தமாதம் 62 மீட்டர் நிலப்பரப்பில் பசுமை தோட்டம் தொடங்கப்பட்டது.
இதுவரை 200 மூங்கில் செடிகள் நடப்பட்டுள்ள நிலையில், வரும் மாதங்களில் மேலும் 54,000 மூங்கில் செடிகளை நடுவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சுற்றுச்சூழல் நிலைக்கேற்ப பசுமை தோட்டத்திற்கு மூங்கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மற்ற தாவரங்களை விட மூங்கில் 30 சதவீதம் அதிக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்கிறது, குறைந்தபட்ச நீர் தேவைப்படுகிறது.
இது காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும், அப்பகுதியில் மாசுபாட்டைக் குறைப்பதற்கும் மூங்கில் சிறந்த தேர்வாக அமைகிறது. மூங்கில் தோட்டங்கள் மண்ணை நிலைப்படுத்துவதன் மூலம், அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, நிலச்சரிவைக் குறைப்பதோடு, நிலச்சரிவு ஏற்படாமலும் தடுக்கிறது.இதன் ஆழமான வேர் அமைப்பு மாசுபடுத்திகளை வடிகட்டவும், நிலத்தடி நீர் மாசுபாட்டைக் குறைக்கவும் உதவுகிறது.
அதற்கடுத்து, நேற்று மாலை முதுமலை புலிகள் காப்பகம் வந்த சக்சேனாவை, துணை இயக்குநர் வித்யா வரவேற்றார். தொடர்ந்து வனத்துறை வாகனத்தில் முதுமலை வனப்பகுதியில் சவாரி செய்து, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமையும் அவர் சுற்றிப் பார்த்தார்.