தமிழ்நாட்டில் அதிமுக, தவெக கொடி பறக்கக் கூடாதா?: முதல்வருக்கு ஜெயகுமார் கேள்வி
அழகுமுத்துக் கோன் விழாவிற்கு வைக்கப்பட்ட அதிமுக, தவெக கொடிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் திமுக கொடி மட்டும் தான் பறக்க வேண்டுமா?, அதிமுக, தவெக கொடி பறக்கக் கூடாதா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பினார்.
வைகோ நன்றி மறக்கக்கூடாது, அதிமுகவால் தான் மதிமுகவிற்கு அங்கீகாரம் கிடைத்தது என தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள அழகுமுத்துக் கோன் சிலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவர் அழகுமுத்துக் கோன், மார்பை பிளந்தபோதும் அவர் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்.
திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு முறையாக இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், லாக்கப் மரணங்கள் என அதிகரித்து வருகிறது. இன்றைக்கு இந்திய விடுதலைப் போராட்ட வீரரின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு கூட சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என விமர்சித்தார்.
வைகோ நன்றி மறந்து பேசுவது நல்லது அல்ல, திமுகவில் இருந்து அவர் பிரிந்து வந்த போது அவருக்கு அங்கீகாரம் கொடுத்தது அதிமுக. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால்தான் அங்கீகாரம் கிடைத்தது என்பது அவர்களுக்கே தெரியும்.கொஞ்சம்கூட வாய் கூசாமல் மறைந்த தலைவரை இழிவுபடுத்தி பேசுவது வைகோவுக்கு நல்லதல்ல. மதிமுகவில் இருந்த தலைவர்கள் பலர் விலகி திமுகவில் இணைந்தபோது வைகோ என்னென்ன விமர்சனங்களை வைத்தார் என்பதை மறந்து விடக்கூடாது என்றார்.
மேலும், அழகுமுத்துக் கோன் விழாவிற்கு வைக்கப்பட்ட அதிமுக, தவெக கொடிகள் அகற்றப்பட்டுள்ளது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழ்நாட்டில் திமுக கொடி மட்டும் தான் பறக்க வேண்டுமா?, அதிமுக, தவெக கொடி பறக்க கூடாதா? என ஜெயகுமார் கேள்வி எழுப்பினார்.