திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது! - முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்
திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டதாக அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் குறைந்த வேக செயல்பாடு, குடிநீர், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து இன்று(ஜூன் 18) காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காவலான் கேட் அருகே மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இதில் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜாபாத் கணேசன், மதனந்தபுரம் பழனி, மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் வசிக்கும் வீடுகளுக்கு அதிகப்படியான சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்டவைகளை உயர்த்தி வஞ்சித்துள்ளதாகவும், பாதாள சாக்கடை திட்டம் குறைந்த வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
போதிய ஊழியர்கள் இல்லாததால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிகள் மேற்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து திருமாவளவன் சந்திப்பு குறித்து கேட்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய வைகைச் செல்வன், திமுக கூட்டணியில் தற்போது ஓட்டை விழுந்துள்ளதாகவும் இதற்கான பதில் விரைவில் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: பாமக எம்எல்ஏவுக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!