திருச்சிக்கு திட்டங்கள் இல்லை! விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அன்பில் மகேஸ் மறுப்பு!
திருச்சிக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் சனிக்கிழமையில் தனது முதல் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய தவெக தலைவர் விஜய், திருச்சிக்கு எந்தவொரு திட்டத்தையும் திமுக அரசு செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், விஜய்யின் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் அன்பில் மகேஸ், ``திருச்சியில் நடந்த சில வளர்ச்சிகளை நீங்கள் பார்க்கவில்லை. கிட்டத்தட்ட ரூ. 128 கோடி மதிப்பில் 38 ஏக்கரில் பேரறிஞர் அண்ணா பெயரில் கனரக வாகனம் சரக்கு முனையம் அமைக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் பெயரில் ரூ. 236 கோடி மதிப்பில் 22 ஏக்கரில் காய்கறி அங்காடி அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதி பெயரில் ரூ. 408 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சப்பூர் அருகே ரூ. 400 கோடி மதிப்பில் டைடல் பார்க் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மணப்பாறையில் 1100 ஏக்கரில் சிப்காட் தொழில் நிறுவனம் கொண்டுவர பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ரூ. 7 லோடி மதிப்பில் வாரச் சந்தையும் கொண்டுவரப்பட்டுள்ளது.
திருவெறும்பூர் தொகுதியில் ரூ. 56 கோடியில் விடுதியுடன் அரசு மாதிரிப் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. ரூ. 150 கோடி மதிப்பில் சர்வதேச ஒலிம்பிக் அகாதெமிக்கான முதற்கட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ரூ. 3 கோடி ஜல்லிக்கட்டு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் காமராசர் பெயரில் ரூ. 290 கோடியில் மிகப்பெரிய நூலகம், அறிவுசார் மையம் கொண்டுவரப்பட்டுள்ளது. ரூ. 18 கோடியிலான பறவைகள் பூங்காவை மக்களும் கண்டுகளித்து வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... வாகனங்களைக் கொல்லும் விஷமா, எத்தனால்?
Minister Anbil Mahesh reply for TVK Leader Vijay