வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தாரா நவாஸ் கனி எம்பி? - சிபிஐ விசாரிக்க வழக்கு
ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீதான சொத்து குவிப்பு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "2019 மற்றும் 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நவாஸ்கனி.

கடந்த 2019 தேர்தலில் போட்டியிட்டபோது வேட்பு மனுவில் மனைவி, மகனுக்கு ரூ 19.71 கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது வேட்பு மனுவில் ரூ 40.62 கோடி சொத்து மதிப்பு காட்டப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ 23.58 கோடி சொத்து குவித்துள்ளார். இது குறித்து புகார் அளித்தும் சிபிஐ எந்தவித விசாரணையும் நடத்தவில்லை.
எனவே புகார் மீது விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்ஸ்வா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.