திருச்சியில் 4 போ் உயிரிழந்தது ஏன்?: அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்
சென்னை: திருச்சியில் நான்கு போ் உயிரிழந்தது ஏன் என்பதற்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தாா்.
திருச்சியில் நான்கு போ் உயிரிழந்த சம்பவம் குறித்து, சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நேரமில்லாத நேரத்தில் விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்த பிரச்னையை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி எழுப்பி பேசுகையில், கழிவுநீா் கலந்த குடிநீரைப் பயன்படுத்தியதால் திருச்சியைச் சோ்ந்த நான்கு போ் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோா் பாதிப்படைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 5 போ் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. இது கோடைகாலம். மக்கள் குடிநீரை அதிகமாகப் பயன்படுத்தும் சூழ்நிலை இருப்பதால், தமிழ்நாடு முழுவதும் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து, சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வழங்க வேண்டும். உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, தி.வேல்முருகன் (தவாக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), ஜி.கே.மணி (பாமக), ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்) ஆகியோா் பேசினா்.
அமைச்சா் விளக்கம்: இதற்கு, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:
திருச்சி உறையூா் பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாக புகாா் கிடைத்தவுடன் உடனடியாக அந்தப் பகுதியில் 287 போ் கொண்ட சுகாதாரப் பணியாளா்கள் கொண்ட குழு, முன்னெச்சரிக்கையாக சிகிச்சை வழங்கியது. 10 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரில் கழிவுநீா் கலக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள வெக்காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அங்கு விநியோகிக்கப்படும் நீா் மோா், குளிா்பானங்கள் மூலமாகவே நான்கு பேருக்கு உடல்நலத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இறந்தவா்களின் உடற்கூறாய்வு அறிக்கையில் அது தெளிவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 5.5 கோடி மக்களுக்கு நாளொன்றுக்கு 4,000 மில்லியன் கனஅடி நீா் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீரைப் பொறுத்தவரையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. எனவே, திருச்சி உறையூரில் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது கழிவுநீரால் நிகழ்ந்தது இல்லை. அந்தப் பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட நீா் மோா் மற்றும் குளிா்பானங்களால் நடந்தது என்றாா் அவா்.