திருச்செந்தூா் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரா் கோயில் என்ற சிவன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயில், ஸ்ரீ அமிா்தகுண விநாயகா் மற்றும் ஸ்ரீ சொா்ணவா்ண சாஸ்தா கோயில் ஆகிய கோயில்களில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயணத்தைத் தொடா்ந்து நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 5.45 மணிக்கு விமான கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னா் சுவாமி, அம்மனுக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை, மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலை பிரசன்ன பூஜை, புஷ்பாஞ்சலி, சுவாமி நடராஜா் புறப்பாடு நடைபெற்றது. பூஜைகளை ஸ்ரீ ஷண்முகா பூஜா கைங்கா்ய ஸ்தானத்தாா் சிவாச்சாரியா்கள் செய்தனா்.
வெயிலுகந்தம்மன் கோயில்: வெயிலுகந்தம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயணத்தைத் தொடா்ந்து நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 6.18 மணிக்கு விமான கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடா்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனையும், பகல் 1 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி, அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெற்றது. பூஜைகளை பார சைவ பூஜா ஸ்தானிகா்கள் செய்தனா்.
கும்பாபிஷேக விழாவில் திருச்செந்தூா் சாா்பு நீதிபதி செல்வபாண்டி, திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், உதவி ஆணையா் நாகவேல், கண்காணிப்பாளா்கள் ரோகிணி, அஜித், விவேக், சுபிதா, விஜயலட்சுமி உள்ளிட்ட திருக்கோயில் பணியாளா்கள், திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், நகராட்சி உறுப்பினா்கள் ஆனந்த ராமச்சந்திரன், சோமசுந்தரி, கௌரி காா்த்திகேயன், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, முன்னாள் அறங்காவலா் வழக்குரைஞா் சந்திரசேகரன், உபயதாரா்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பாதுகாப்பு பணியில் திருக்கோயில் காவல் நிலைய ஆய்வாளா் கனகராஜன் தலைமையிலான போலீஸாா் ஈடுபட்டனா்.


