தில்லி தேர்தலில் வாக்களித்த குடியரசுத் தலைவர், ஜெய்சங்கர், ராகுல்!
திருப்பரங்குன்றம்: "இந்து விரோத தாலிபன் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம்" - ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு
இந்து முன்னணி அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி தராததாலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாலும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசும்போது,
"காலையிலிருந்து வீட்டுக்காவலில் வைத்திருந்து நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு வெளியே விட்டார்கள். தமிழகத்திலிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தாலிபன் அரசுக்கும் இந்து விரோத தீய அரசிற்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன் இப்படித்தான் உத்தரப்பிரதேசத்திலும் இருந்தது. இனிமேல் எதிரிகள் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. அதுபோல இங்கும் ஏற்படும்.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தைப் பங்கு போட நினைக்கும் தீய கூட்டத்திற்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். முதலில் வந்தது முருகன் கோயில்? தர்காவா? எது முன்னதாக வந்தது என்று யோசித்துப் பார்க்க வேண்டும். இப்போது மட்டும் ஏன் பிரச்னை வருகிறது?
தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்துக்களுக்கு விரோத ஆட்சி நடக்கிறது. முன்னெச்சரிக்கையாக நம்மைக் கைது செய்த காவல்துறை அதிகாரிகள் பேசிய வார்த்தைகளைப் பதிவு செய்யுங்கள், புகார் அளிக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்துக்கு ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவு மதுரை மாவட்டத்துக்கு மட்டும்தான் செல்லுபடியாகும். ஆனால், சென்னை, திருப்பூர், காரைக்குடியில் எப்படி செல்லுபடியாகும்? அப்படியிருக்கும்போது அங்குள்ள காவல்துறையினர் எங்களை வீட்டுக்காவலில் வைத்தது சட்ட விரோதமானது. உங்களுக்கு நவாஸ்கனியைப் பார்த்தால் கால் நடுங்குகிறது, ஒவ்வொரு காவல்துறை அதிகாரியையும் நாம் நீதிமன்றத்தில் ஏற்ற வேண்டும், இதுவே அவர்களுக்கு இறுதியாக இருக்க வேண்டும். மானம் கெட்ட கூட்டம் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறார்கள்.
இன்றைக்கு இந்து அமைப்பினர், பாரதிய ஜனதா கட்சியினர் என ஐந்து லட்சத்துக்கு மேற்பட்டோர் இங்குக் கூடி இருக்க வேண்டும். ஆனால், அனைவரையும் கைது செய்து அடைத்து வைத்திருக்கிறார்கள்.
சிக்கந்தர் என்ற நபர் பிறப்பதற்கு முன்பே திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. தற்போது தர்காவுக்குச் செல்கிறேன் என்கிறார்கள். சிக்கந்தர் ஏன் மேலே சென்றார், அன்றைக்குத் தர்கா எதுவுமே இல்லை, மலை மீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலை இடிக்கச் சென்றவர்தான் சிக்கந்தர் என்று ஊர் மக்கள் சொல்கிறார்கள்.
நமது கோயிலை இடிக்கச் சென்றவருக்குத் தர்காவா? அரசு ஆவணத்தின்படி மதுரை கோரிப்பாளையத்தில் சிக்கந்தர் சமாதி இருப்பது உண்மை என்றால் மலை மீது இருப்பது போலி தானே, திருப்பரங்குன்றம் மலையையும் முதற்படை வீடான முருகனையும் அபகரிக்கும் திட்டம்தானே.
இந்துக்கள் நாம் ஒற்றுமையாக இல்லாமல் இருந்தால், தமிழ் கடவுள் முருகனையும் தரித்திரனாக்கி விடுவார்கள். முதற்படை வீட்டைக் கூறு போடுவதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது?
1944-ல் பிரிவினைவாத மாநாட்டில், பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுக்காவிட்டால் உள்நாட்டுப் போர் தொடங்கும் என்று முகமது அலி ஜின்னா சொன்னார். பிரித்துக் கொடுத்தாலும் உள்நாட்டுப் போர் தொடரும் என்று சட்டமேதை அம்பேத்கர் கூறியதைப் போன்று உள்நாட்டு யுத்தத்திற்கு நவாஸ் கனி ஆடு கோழியுடன் திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று இருக்கிறார்.
இன்றைக்கு முளையிலேயே கிள்ளி எரியாவிட்டால் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். அயோத்தி போன்று ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் தடை செய்துள்ளோம் என்று தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறது. இதுதான் ஆரம்பமே, அயோத்தி யுத்தம் இங்கு முதல் படை வீட்டில் துவங்குகிறது. இப்போது இருக்கின்ற இந்து விரோத தாலிபன் அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். 2026 தேர்தலில் முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதியுடன் இருப்போம், இந்து ஒருமைப்பாட்டை உலகுக்குக் காட்டுவோம்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs