Mani Ratnam: ``இதற்கு இரண்டு தசாப்தங்கள் ஆகியிருக்கிறது மணி சார்!'' - ராஜ்குமார...
தில்லி தேர்தலில் வாக்களித்த குடியரசுத் தலைவர், ஜெய்சங்கர், ராகுல்!
தில்லிப் பேரவைத் தேர்தலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி ஆகியோர் வாக்களித்தனர்.
தலைநகரான தில்லியில் பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு 13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது!
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஆம் ஆத்மி தலைவரும் தில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, தில்லி காவல் துறை ஆணையர் சஞ்சய் அரோரா, தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ஆர். ஆலிஸ் வாஸ், தில்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, அவரது மனைவி சங்கீதா சக்சேனா ஆகியோரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆம் ஆத்மி கட்சியின் கைலாஷ் தொகுதி வேட்பாளர் சௌரப் பரத்வாஜ், பாஜகவின் கரவால் நகர் வேட்பாளர் கபில் மிஸ்ரா, காங்கிரஸின் புது தில்லி வேட்பாளர் சந்தீப் தீக்ஷித் மற்றும் கல்காஜி வேட்பாளர் அல்கா லம்பா ஆகியோரும் தங்களது தொகுதிகளில் வாக்களித்தனர்.
காலையில் பனிப்பொழிவால் வாக்குப் பதிவு மந்தமாகக் காணப்பட்டது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவிருக்கிறது.