தில்லி தேர்தல்: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி வாக்களித்தனர்!
தில்லி பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர்.
தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 19.95% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தில்லி வடகிழக்கு மாவட்டத்தில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8 என்று எண்ணப்பட உள்ளன.
இதையும் படிக்க | காலை 11 மணி நிலவரம்: ஈரோடு கிழக்கில் 26.03% வாக்குப்பதிவு!
தில்லி பேரவைத் தேர்தலில் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.
தில்லி அரசு அலுவலகமான நிர்மன் பவனில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது வாக்கினைச் செலுத்தினார். அவரது மகளும் காங்கிரஸ் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி, புதுதில்லி காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீக்ஷித் ஆகியோர் அவருடன் சென்றனர்.
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் தங்கள் வாக்கினைச் செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பிரியங்கா காந்தி,
'வீடுகளில் இருந்து வெளியே வந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். நமது அரசியலமைப்பு நமக்கு மிக முக்கியமான உரிமையை வழங்கியுள்ளது. எனவே அதை நாம் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். தில்லி மக்கள் சோர்வடைந்துவிட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் எங்கு சென்றாலும், தண்ணீர், காற்று, சாலைகள் சரியில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். இதுபோன்று பல பிரச்னைகள் உள்ளன. அவற்றையெல்லாம் சரிசெய்ய விரும்பினால், அனைவரும் வாக்களியுங்கள்' என்று பேசினார்.