ஈரோடு: ``பூத் நிர்வாகிகளின் பெற்றோர்களை திமுகவினர் மிரட்டுகின்றனர்'' -நாதக வேட்பாளர் குற்றச்சாட்டு
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். வாக்குச் சாவடி மையங்களில் பார்வையிட்ட சீதாலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஈரோடு கிழக்குத் தொகுதியில் பல வாக்குச் சாவடிகளில் ஆளுங்கட்சி பிரமுகர்களால் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. 70 சதவீத வாக்குச் சாவடிகளுக்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை முகவர்களாக நாம் தமிழர் கட்சி சார்பில் நியமித்துள்ளோம். அவர்களின் பெற்றோர்களை அழைத்து திமுக-வினர் மிரட்டுகின்றனர். அவர்களின் குடும்பத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களை வெளியேறச் சொல்லிவிட்டோம்.
திமுக-வினர் சர்வ சாதரணமாக வாக்குச் சாவடிக்குள் செல்போன்களை எடுத்துச் சென்று வீடியோ எடுக்கின்றனர். செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களை வீடியோ எடுக்க கூடாது என மிரட்டப்படுகின்றனர். நீங்கள் ஏன் வாக்குச் சாவடிக்குள் வந்தீர்கள்? என கேட்டால், வேட்பாளரின் முகவர், ஆளுங்கட்சி பிரமுகர் என்று கூறுகின்றனர். இது ஏற்புடையதல்ல. வேட்பாளராகிய என்னை கட்சித் துண்டு போடக் கூடாது என்று திமுக-வினர் மிரட்டுகின்றனர்.
தங்களிடம் அதிகாரம் இருக்கிறது. அது தங்களுக்குத்தான் மீண்டும் கிடைக்கும் என திமுக-வினர் நினைக்கின்றனர். ஆனால், இளைஞர்கள் மற்றும் அரசியலில் மாற்றம் வர வேண்டுமென நினைப்பவர்கள் நாம் தமிழரைத்தான் ஆதரிப்பார்கள் என நம்புகிறோம். ஆனால், எங்கள் பூத் நிர்வாகிகளுக்கு நெருக்கடி கொடுப்பது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது.
கடந்த தேர்தலின்போது, 60 ஆயிரம் வாக்குகள் பதிவாகவில்லை. ஆனால், இந்த தேர்தலில் மக்கள் தன்னெழுச்சியாக வாக்களிப்பதை காண முடிகிறது. பெண் ஒருவரின் வாக்கை வேறொருவர் போட்டது குறித்து தற்போதுதான் தகவல் கிடைத்தது. உரிய ஆதாரம் இல்லாமல் என்னால் குற்றம் சொல்ல முடியாது. வாக்குச் சாவடி முழுவதும் திமுகவினர் வசம்தான் உள்ளது" என்றார்.