``கிளாம்பாக்கத்தில் 18 வயது பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை..." - அண்ணாமலை கண்டனம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கிளம்பாக்கத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை சாதாரணமாகிவிட்டதாகவும் திமுக அரசை விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அண்ணாமலை, ``கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்துக்கு வெளியே 18 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த ஒரு நல்ல மனிதரின் செயலால் அந்தப் பெண் மீட்கப்பட்டார்.
தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமையும் சாதாரணமாகிவிட்டது. போதைப்பொருள்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாறிவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில், 2022 - 2024க்கு இடையில், தமிழ்நாட்டில் NDPS (Narcotics drugs and Psychotropic Substances act 1985) வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,122 மட்டுமே. அதேசமயம், 2021-ல் மட்டும் NDPS வழக்குகளில் மொத்தமாக 9,632 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் கஞ்சா ஆகியவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால், கைதுகளின் எண்ணிக்கை குறைவது எப்படி? போதைப்பொருள் வியாபாரிகளைச் சுதந்திரமாக நடமாடவிட தமிழ்நாடு அரசு வேண்டுமென்றே மெத்தனமாகிவிட்டதா? நம் சகோதரிகள் சாலையில் பாதுகாப்பாக நடமாட இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்கள்?" என்று திமுக அரசுக்கு கேள்வியெழுப்பியிருக்கிறார்.