இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!
திருப்பரங்குன்றம்: "பக்தர்கள் மேல கை வச்சா நீங்க இருக்க மாட்டிங்க..." - அண்ணாமலை பரபரப்புப் பேட்டி
திருப்பரங்குன்றம் விவகாரத்தின் பரபரப்பு அடங்கி, இன்று முதல் பக்தர்கள் கோயில், தர்காவிற்குச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது காவல்துறை.
இருப்பினும், சிறிது நாள்களுக்குச் சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்கு கட்சி, அமைப்புகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது என காவல்துறை கூறியிருக்கிறது. நேற்று (பிப் 4) மாலை 5 மணி அளவில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "வட மாநிலங்களைப் போல் இங்கும் கலவரங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் இங்கு இருக்கின்ற முதல்வர் உறுதிமிக்க முதல்வர், இரும்பு மனிதர். எங்கு கலவரங்கள் ஏற்பட்டாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கத் தயாராக இருக்கிறார்" என்று காட்டமாகப் பேசியிருந்தார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தைத் தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடக்காது. இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தமிழ்நாடு. இதைப் பெரிய விவகாரமாக்கி அதில் லாபம் அடைய வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதியின் காட்டமான கருத்திற்குப் பதிலளித்துப் பேசியிருக்கும் 'பா.ஜ.க' அண்ணாமலை, "நேற்று நீதிமன்றம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியவுடன் தன்னெழுச்சியாக பக்தர்கள் போராடினார்கள். எங்களை 'இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம், ஒடுக்குவோம்' என்று சொல்கிறார்கள். அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதியை எப்படி அடக்க வேண்டும் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். வார்த்தைகளை அளந்து பேசவேண்டும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் என்ன தப்பானவர்களா?
அங்குப் போராடுபவர்கள் முருக பக்தர்கள். அவர்கள் மீது கை வைத்தால் நீங்க இருக்க மாட்டீங்க. இனிமேல், 'இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்' என்று பேசினால், ரகுபதி இருக்கும் இடம், அவருக்கே தெரியாமல் போகும் . 'தி.மு.க'வின் இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் எங்கக்கிட்ட வேண்டாம்" என்று ஆவேசத்துடன் பேசியிருக்கிறார் அண்ணாமலை.