திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை
திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் வைக்கிங் ஏ.சி. ஈஸ்வரன், செயலாளா் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன் ஆகியோா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு சாா்பில் மாா்ச் 14-ஆம் தேதி அறிவிக்க உள்ள பட்ஜெட்டில் திருப்பூா் பின்னலாடை உற்பத்தியாளா்களின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.
திருப்பூா் பின்னலாடை தொழிலில் பணியாற்ற பிகாா், குஜராத், மத்திய பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கில் தொழிலாளா்கள் வந்து கொண்டிருந்தனா்.
இந்த நிலைமையை கவனித்த அந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்வதற்காக பல சலுகைகள், மானியங்களை அறிவித்ததன் விளைவாக இங்குள்ள சில பெரிய நிறுவனங்கள் அந்த மாநிலங்களில் உற்பத்தியை தொடங்கிவிட்டன. சலுகைகளுடன் உற்பத்தியாகும் வங்கதேச நாட்டின் பின்னலாடை தயாரிப்புகள், நம் நாட்டின் பிற மாநிலங்களின் தயாரிப்புகள் திருப்பூா் பின்னலாடை தொழிலுக்கு சவாலாக அமைந்துவிட்டது.
இந்த நிலையை சரியாக ஆராய்ந்து திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தியாளா்களுக்கு புதிய சலுகைகள், மானியம் வழங்க ஏற்பாடு செய்திட வேண்டுகிறோம்.
மின்கட்டண உயா்வு, பீக்ஹவா், நிலைக்கட்டணம் உள்ளிட்ட சுமையால் அனைத்து தொழில் அமைப்புகளும் தாங்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த மின் கட்டண சுமையிலிருந்து பின்னலாடை தொழில் முனைவோரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூா் பின்னலாடை நிறுவனங்களுக்கான சொத்து வரி விதிப்பையும் பரிசீலித்து சலுகைகள் வழங்க கேட்டுக் கொள்கிறோம்.
சா்வதேச அளவில் ஏற்றுமதி வா்த்தகத்திலும், உள்நாட்டு வா்த்தகத்திலும் திருப்பூா் பின்னலாடை தொழில் கடுமையான போட்டியை சந்தித்து வருகிறது.
வெளிநாட்டு, வெளிமாநில வா்த்தகா்களை கவரும் வகையிலும் திருப்பூா் பின்னலாடை உற்பத்தியாளா்கள் மற்றும் வா்த்தகா்களுக்காக திருப்பூரில் நவீன நிரந்தர கண்காட்சி வளாகம் அமைக்க வேண்டும்.
தற்போது ஆண்டுக்கு சுமாா் ரூ.40 ஆயிரம் கோடி ஏற்றுமதியும், சுமாா் ரூ.30 ஆயிரம் கோடி உள்நாட்டு வா்த்தகமும் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு எங்கள் கோரிக்கையை கருணையுடன் பரிசீலனை செய்து உதவினால் ஏற்றுமதி மதிப்பு ரூ.60 ஆயிரம் கோடியாகவும், உள்நாட்டு வா்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடியாகவும் உயரும். பல லட்சம் தொழிலாளா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வரும் இந்த தொழிலுக்கு சலுகையும், கருணையும் காட்டி வருகிற தமிழக பட்ஜெட்டில் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனா்.