பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!
பெங்களூரில் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு தனியார் புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நியமித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரும் பணிபுரிபவர்களாக இருப்பார்களெனில், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான தகவல்தொடர்பு குறைவு. தகவல்தொடர்பும் அவர்களுடன் செலவழிக்கும் நேரமும் குறைவாக இருப்பதால், குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை குறித்து பெங்களூரில் பெற்றோர் மிகுந்த கவலை கொண்டிருப்பதுடன், குழந்தைகள் தவறான பாதையில் செல்ல நேரிடுவதைத் தடுக்க தனியார் புலனாய்வு அதிகாரிகளையும் நியமித்து வருகின்றனர்.
தனியார் புலனாய்வு உதவியை பெற்றோர்கள் நாடுவதன் காரணம்
தங்கள் குழந்தைகளின் கல்வியில் செயல்திறன் குறைவு, பள்ளி அல்லது கல்லூரியில் வருகைப்பதிவு குறைவு, குழந்தைகள் யாரையெல்லாம் சந்திக்கிறார்கள் என்பதை பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளாதது, தங்கள் அறைக்குள் யாரையும் அனுமதிக்காதது, குளியலறையில் அதிகநேரம் செலவிடுவது, எப்போதும் சோர்வுடன் இருப்பது, ஒழுங்கற்ற நடவடிக்கைகள் மற்றும் சொற்களைப் பேசுதல், அதிக பணம் கேட்பது, திருடுவது, நண்பர்களுடன் குழுவாகச் சேர்ந்து படிக்கவிருப்பதாகக் கூறி நாள்கணக்கில் வீடு திரும்பாமல் இருப்பது முதலான காரணங்களால் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து அறிய புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நாடுகின்றனர்.
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் புலனாய்வு நிறுவனங்கள்
குழந்தைகளைக் கண்காணிக்க பெற்றோர்கள் தனியார் புலனாய்வு அதிகாரிகளை நியமிப்பதை, தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுவாக பள்ளி, கல்லூரி, உணவு விடுதிகள், பப்கள், கச்சேரிகள் முதலான இடங்களில் புகாரில் சம்பந்தப்பட்ட நபர்களை புலனாய்வு அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.
மாதத்துக்கு 10 முதல் 15 வழக்குகள்வரையில் வருவதாகக் கூறுகின்றனர். புகாரில் சம்பந்தப்பட்ட நபரைக் கண்காணிக்க ஒரு நாளுக்கு ரூ. 5000 முதல் ரூ. 10,000 வரையில் வசூலிப்பதாகவும் கூறுகின்றனர்.
இதுபோன்ற வழக்குகள் ஆண்டுக்கு 15 சதவிகிதம் என்ற அளவில் அதிகரிப்பதாக ஆய்வில் தெரிகிறது.
பெங்களூரு, மும்பை, சூரத், அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில்தான் குழந்தைகளைக் கண்காணிக்க புலனாய்வு அதிகாரிகளின் உதவியை பெற்றோர் அதிகளவில் நாடுகின்றனர்.
இதையும் படிக்க:ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!
அதிகாரிகளிடம் பிடிபட்ட சில வழக்குகள்
பெற்றோர்கள் பலர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்களின் குழந்தைகளைக் கண்காணித்ததில், பலரும் போதைப் பொருள்களைப் (90 சதவிகித வழக்குகளில்) பயன்படுத்துவது தெரிய வந்தது.
கால் சென்டரில் பணிபுரியும் ஒருவர் குறைந்த காலஅளவிலேயே அதிகளவில் சம்பாதிப்பது குறித்து சந்தேகமடைந்த அவரின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்களின் மகனைக் கண்காணித்ததில், அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மற்றொரு வழக்கில், ஒருவர் நகைகளை அடமானம் வைத்து ரூ. 5 லட்சம் கடன் வாங்கி, சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கல்லூரி மாணவர்கள், அவர்களைவிட முதிர்வயது பெண்களுடன் தொடர்பில் இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.