திருவேற்காட்டில் ரூ.18.40 கோடியில் உயர்மட்ட பாலம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
திருவேற்காடு அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ. 18.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, சா.மு.நாசர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.
திருவேற்காடு- பருத்திப்பட்டு இடையே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ. 18.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை வகித்தார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலர் ஆர்.செல்வராஜ், நெடுஞ்சாலைத் துறை பெருநகர அலகின் தலைமை பொறியாளர் எஸ்.ஜவகர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் கலந்து கொண்டு, உயர்மட்டப் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.
பின்னர், அமைச்சர் வேலு பேசியது: திருவேற்காடு பகுதி மக்கள் ஆவடி, பூந்தமல்லி, சென்னை பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமென்றால், கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த தலைப்பாலத்தை பயன்படுத்தி பல ஆண்டுகளாக சென்று வந்தனர். மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமானால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படும். இதனால் மேற்கண்ட பகுதி மக்கள் பல கி.மீ. தூரம் சுற்றி ஆவடி, பூந்தமல்லி மற்றும் சென்னைக்கு செல்ல வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, தரைப்பாலத்துக்கு பதிலாக உயர்மட்டப் பாலம் ரூ. 18.40 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, 94 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலத்திலும் இருவழி பாதையுடன், இரு பக்கமும் மிதிவண்டி பாதை 2 மீட்டர் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்ல, 1.50 மீட்டர் நடை பாதையுடன் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்ட இந்த பாலத்தால் திருவேற்காடு, பருத்திப்பட்டு, வீரராகபுரம், ஆவடி, பூந்தமல்லி, காடுவெட்டி, கோவர்த்தனகிரி, சென்னீர்குப்பம் பகுதியில் வசிக்கும் மக்கள் எளிதாக கூவம் ஆற்றைக் கடக்க பெரிதும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் பெருநகர அலகின் கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், கோட்டப் பொறியாளர் ரவிச்சந்திரன், திருவேற்காடு நகர்மன்றத் தலைவர் என்.இ.கே.மூர்த்தி, துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், பூந்தமல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.