GD Naidu : `இந்தியாவின் எடிசன்' - மாதவன் படத்தின் நிஜ நாயகன் - ஜி.டி.நாயுடு-வின் சொல்லப்படாத கதை!
ராக்கெட்டரி படத்தைத் தொடர்ந்து மாதவன் மற்றொரு விஞ்ஞானியின் சுய சரிதத்தை இயக்கவுள்ளார். கோயம்புத்தூரில் பிறந்து 19ம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவராக மாறிய ஜி.டி.நாயுடுதான் அந்த விஞ்ஞானி.
கோபால்சுவாமி துரைசுவாமி நாயுடு என்பது அவரது முழுப்பெயர். இந்தியாவின் எடிசன் எனப் போற்றப்படுகிறார். முறையான கல்வியை பெற்றது குறைவாகத்தான் என்றாலும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பட்டங்களை விட ஆர்வமும் விடாமுயற்சியுமே அவசியம் என்பதைக் காட்டும் அவரது கதை இளைஞர்களுக்கு எப்போதுமே இன்ஸ்பிரேஷனாக இருக்கும்.
தானாக கற்றுக்கொள்ளும் மாணவர்
1893ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி, கலங்கல் பகுதியில் பிறந்த ஜி.டி.நாயுடுவுக்கு புதியன கேட்கும் தாகம் ஓய்ந்ததே இல்லை. இளம் வயதில் உணவகத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது பணம் சேர்த்து ஒரு மோட்டார் பைக் வாங்கி, அதன் இயக்கவியலைப் புரிந்துகொள்வதற்காக முழுவதுமாக பிரித்து மாட்டி கற்றுக்கொண்டார். பின்னாளில் யுனைடெட் மோட்டார் சர்வீசஸ் என்ற போக்குவரத்து நிறுவனத்தை உருவாக்கினார். புத்தக கல்வியைக் கடந்தது அவரது அறிவியல் சிந்தனை. புதுமைக்கான தாகத்துடன் தொழில்முனைவோர் மனப்பான்மையும் சமூகத்துக்கு உதவும் மனமும் ஒன்றிணைந்து அவரது கண்டுபிடிப்புகளை உருவாக்கின என்றே கூறலாம்.
மெக்கானிக், எலெக்ட்ரிகல், விவசாயத்துறைகளில் ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அவரது தந்தை ஒரு விவசாயி என்பதால் விவசாயத்தை மேம்படுத்துவதில் தனித்த கரிசனம் கொண்டிருந்தார் ஜி.டி.நாயுடு.
பள்ளிக் கல்வியில் ஆரம்பம் முதலே ஈடுபாடில்லாமல் இருந்துள்ளார் ஜி.டி.நாயுடு. அவரைப் பற்றிய `அப்பா' என்ற புத்தகத்தில், ஜி.டி.நாயுடு ஒருநாள் ஆசிரியர் மீது மண்ணைத் தூவிவிட்டு வந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.
GD Naidu எடுத்து வைத்த முதலடிகள்!
தினமும் காலையில் தந்தையுடன் வயலில் வேலை செய்தவர், இரவில் தமிழ் புத்தகங்கள் வாசிப்பதன்மூலம் தன்னை உருவாக்கியிருக்கிறார்.
ஹோட்டலில் பணியாற்றிய ஜி.டி.நாயுடு, மெக்கானிக்காக உருவானார். அவரது எளிமையான பின்புலமும் உள்ளுக்குள் எரிந்த கங்கும் அணையாமல் இருக்க காரணமாக இருந்தது. வளர வளர அது சுடர்விடத் தொடங்கியது.
1920களில் இந்தியாவின் முதல் உள்நாட்டு காரைத் தயாரித்தார் ஜி.டி.நாயுடு. தொழில்நுட்ப சந்தையில் போட்டிப்போடும் நாடாக இந்தியாவின் முதல் அடி அது.
இதுபோல பல முதலடிகளை எடுத்து வைத்தவர் ஜி.டி.நாயுடு. இன்று உலகம் முழுவதும் குழந்தைகள் விரும்பி உண்ணும் பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியதும் அவரே. ஒரு பக்கம் கார் - மறுபக்கம் பஞ்சு மிட்டாய்... இதுதான் ஜி.டி.நாயுடு. அவரது கண்டுபிடிப்புகள் எந்த பெட்டியிலும் அடைக்கப்படவில்லை.
அன்றாட வாழ்வில் அறிவியல்!
இந்தியா ஒரு விவசாய நாடு. கடந்த நூற்றாண்டில் விவசாயம்தான் இந்தியா பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தது. உருளைக்கிழங்கு தோல் எடுக்கும் கருவி, ஜுசர், நிலக்கடலை உடைக்கும் இயந்திரம், எளிதாக கையாளக் கூடிய கரும்பு அரைக்கும் இயந்திரம் போன்ற இவரது கருவிகள் விவசாயிகளின் செயல்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தின.
ஷேவிங் ரேசர், பிளேடு, சுவர் கடிகாரம், ரேடியோகிராம், தமிழ் டயல் ரேடியோ, கட்டட கலவை, எலெக்ட்ரிக் மோட்டார், ஏழைகளுக்கான எளிமையாக கட்டக்கூடிய வீடு, ஆட்டோமெடிக் டிக்கெட் மெஷின் என பல துறைகளைச் சேர்ந்த பல கருவிகளை உருவாக்கியுள்ளார்.
கண்டுபிடிப்புகளை உருவாக்குவது மட்டுமே ஜே.டி.நாயுடு அல்ல. அவர் ஒரு சிறந்த நன்கொடையாளரும் தொழில்துறை வல்லுநரும் கூட. கோவையின் தொழில்துறையை வடிவமைத்ததில் அவரது பங்கு இன்றியமையாதது.
பல தொழில்களை நிறுவி வேலைவாய்ப்புகளை உருவாக்கினார். முதல் பாலிடெக்னிக் கல்லூரியை நிறுவி மாணவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கினார். அவர் உருவாக்கிய ஏழைகளுக்கான வீடுகள் குறைந்த செலவில் 11 மணிநேரத்திலேயே கட்டி முடிக்கப்படக் கூடியவை. எல்லோருக்கும் சொந்த வீடு என்பது அவரது கனவாக இருந்தது.
அறியப்படாத உண்மைகள்!
லண்டனில் 1935ம் ஆண்டு மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் அடக்கத்துக்கு நேரில் சென்றதுடன், அவரே புகைப்படமும் எடுத்துள்ளார்.
ஜெர்மனி சென்று ஹிட்லரை சந்தித்துள்ளார்.
அவரது கேமராவால் காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஆளுமைகளை படமெடுத்துள்ளார்.
1936ம் ஆண்டு மாகாண பொதுத்தேர்தலில் நின்று தோல்வியை தழுவினார் ஜி.டி.நாயுடு. அந்த ஒரு நிகழ்வைத் தவிர, அவர் அரசியலில் பார்வையாளராகவே இருந்துள்ளார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/23b7405b/vikatan2019-07eeb96456-fb12-400f-ad81-c67da3cccb61IMG20190724WA0041.avif)
தனது காலத்திலேயே உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்திருந்தார்.
கோவை நகருக்கு சிறுவாணி தண்ணீர் வழங்கும் திட்டத்தில் தமிழகத்தின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம், ரத்னசபாபதி முதலியார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். அவரது முயற்சிகள் மற்றும் நன்கொடையால் பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் உருவாகியிருக்கின்றன.
விடாமுயற்சி, தொடர்ச்சியான கற்றல் மற்றும் சமூக பங்களிப்பு இணைந்தே ஒரு வெற்றிகரமான ஆளுமையை உருவாக்கும் என்பதை இளைஞர்கள் ஜி.டி.நாயுடுவைப் பார்த்து கற்றுக்கொள்ளலாம்.