Unnatural Sex: `மனைவியுடன் ஒப்புதலற்ற இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல' - நீதிமன்றம் சொல்வதென்ன?
சத்தீஸ்கர் மாநிலத்தில், இயற்கைக்கு மாறான உடலுறவால் பெரிட்டோனிடிஸ், மலக்குடலில் துளை போன்ற நோயால் பாதிக்கப்பட்டப் பெண் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்த நிலையில், சமீபத்தில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்குப் பிறகு, 'இயற்கைக்கு மாறான உடலுறவால் ஏற்பட்ட பாதிப்பால்தான் அவர் உயிரிழந்தார்' எனக் குறிப்பிட்ட விசாரணை நீதிமன்றம், உயிரிழந்த பெண்ணின் கணவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-03/fbefbd50-7945-488f-a89b-5179692440f0/illustration_2223973_1280.jpg)
இந்த தீர்ப்பை எதிர்த்து சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஏற்கெனவே, இந்தியாவில் திருமணத்துக்குப் பிறகான பாலியல் வன்கொடுமை, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமல்ல என நீதிமன்றத் தீர்ப்பிருக்கும் நிலையில், திருமணத்துக்குப் பிறகான பாலியல் வன்கொடுமையும் குற்றமே என உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு, ``திருமணம் என்ற கட்டமைப்பை பாதுகாப்பது அவசியம். எனவே, திருமணத்துக்குப் பிறகான பாலியல் வன்கொடுமையை குற்றமாக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் இல்லை" எனக் கருதுகிறது.
அதனால் இயற்கைக்கு மாறான உடலுறவு குறித்த இந்த வழக்கு கவனம் பெற்றது. இந்த வழக்கை விசாரித்த சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், ``இயற்கைக்கு மாறான உடலுறவு கொலைக்கு சமமானதல்ல. மனைவி 15 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், எந்த உடலுறவையும், எந்த சூழ்நிலையிலும் கணவரின் பாலியல் தொல்லை எனக் கூற முடியாது. எனவே, இயற்கைக்கு மாறான உறவுக்கு மனைவியின் ஒப்புதல் இல்லாதது முக்கியத்துவத்தை இழக்கிறது. அதனால், இயற்கைக்கு மாறான உடலுறவு தண்டனையின் வரம்பிலிருந்து விலக்கப்படுகிறது." எனக் குறிப்பிட்டு, குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்திருக்கிறது.