மாகி பௌர்ணமி: ஹரித்வாரில் திரளானோர் புனித நீராடல்!
மாகி பௌர்ணமியை முன்னிட்டு ஹிரித்வாரில் உள்ள கங்கை நதியில் திரளான பக்தர்கள் புனித நீராடி பிரார்த்தனை செய்தனர்.
இதற்கிடையில், மகா கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் ஒரு மாத காலத்துக்கு தங்கியிருந்து மேற்கொள்ளும் கல்பவாச விரத வழிபாடு மாகி பௌர்ணமியுடன் நிறைவடைகிறது. மாநில அரசு தகவலின்படி, நடப்பு கும்பமேளாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கல்பவாச விரத வழிபாடு மேற்கொண்டனர்.
கும்பமேளாவில் மாகி பௌர்ணமியன்று புனித நீராடுவது சிறப்புக்குரியதாகும். இதையொட்டி கடந்த சில நாள்களாக பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் பிரயாக்ராஜை முற்றுகையிட்டனர். பிரயாக்ராஜ் நோக்கிய பல தேசிய நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பல கி.மீ-க்கு அணிவகுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிறகு பக்தர் ஒருவர் கூறுகையில், இன்று அதிகாலை 3 மணிக்கு புனித நீராடினேன். மௌனி அமாவாசையை விட இன்று கூட்டம் குறைவாகவே உள்ளது. இங்கு ஏற்பாடுகள் நன்றாக உள்ளன என்றார்.
மேலும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மற்றும் துறவிகள் மீது மலர் இதழ்கள் பொழிந்தன.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இதுவரை 48.83 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
மேளா மைதானத்திற்கு வருகை தரும் மொத்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 38.83 மில்லியனை எட்டியுள்ளது, அதே நேரத்தில் அப்பகுதியில் தங்கியுள்ள கல்பவாசிகள் 10 மில்லியனைத் தாண்டியுள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அலுவலகத்திலிருந்து சங்கமத்தில் நடைபெறும் மாகி பௌர்ணமி புனித நீராடலைக் கண்காணித்தார். இந்த மங்களகரமான நிகழ்வில் எக்ஸ் தளத்தில் மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த பிரமாண்டமான நிகழ்வு பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி அன்று நிறைவடைகின்றது.