சாம்பியன்ஸ் டிராபி: ஸ்டார்க் விலகல்! 5 முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் ஆஸி.!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து தனிப்பட்ட காரணத்துக்காக மிட்செல் ஸ்டார்க் விலகியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபையில் நடத்தப்படவுள்ளன. மற்ற அணிகளுக்கான போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது.
இதையும் படிக்க : சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா விலகல்! இந்தியாவுக்கு பின்னடைவு!
இந்த தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளார் ஜோஸ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக ஏற்கெனவே விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகுவதாக தெரிவித்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் திடீரென கடந்த வாரம் அறிவித்தார்.
தற்போது தனிப்பட்ட காரணங்களுக்காக மிட்செல் ஸ்டார்க் விலகுவதாக அறிவித்துள்ளார். அணியின் 5 முன்னணி வீரர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபியை ஆஸ்திரேலியா சந்திப்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணி
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சென் அபோட், அலெக்ஸ் கேரி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் எங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேத்யூ ஷார்ட், ஆடம் ஸாம்பா.