தீக்ஷனா அசத்தல் பந்துவீச்சு..! 49 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி!
பிப். 17-ல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை!
வருகிற பிப். 17 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப். 12) உத்தரவிட்டுள்ளது.
அதிமுக விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, ஓ.பி. ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணையின் முடிவில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, அதிமுக உள்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம், புதிய தலைமை ஆகியவை குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க எந்தவித நிபந்தனையும் இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த தீர்ப்பினை வரவேற்பதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார்.
தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பிப். 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்திற்கு அண்ணாமலை நிதி பெற்றுத் தரலாமே! - அன்பில் மகேஸ்
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
"அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில், சென்னை எக்மோர், பாந்தியன் சாலை, அசோகா ஹோட்டலில் உள்ள டாக்டர் கேபிஎம் ஹாலில் 17-02-2025 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.