சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: முன்னாள் காங்கிரஸ் எம்.பி. குற்றவாளி என தீர்ப்பு!
சீக்கியர்களுக்கு எதிராக 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் இரட்டைக் கொலை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் படுகொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தில்லியில் கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கியா்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது. கொடிய ஆயுதங்களுடன் பெரிய அளவிலான கொலை, தீவைப்பு, சீக்கியா்களின் சொத்துக்களை அழித்தல் ஆகியவை நிகழ்ந்தன.
இந்த கலவரத்தின்போது சரஸ்வதி விஹாா் பகுதியைச் சோ்ந்த ஜஸ்வந்த் சிங், அவரது மகன் ஆகியோர் கொல்லப்பட்டு அவா்களது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.
இதையும் படிக்க | இலவசங்களால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை: உச்ச நீதிமன்றம்!
இந்த கலவரம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் தலைமையில் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடா்பாக தில்லி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சஜ்ஜன் குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பதிவு செய்த உயா்நீதிமன்றம், போதுமான ஆதாரங்கள் இருப்பதால் வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற வழக்கின் விசாரணைக்கு ஏற்கனவே ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 6 ஆண்டுகளாக திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஜ்ஜன் குமாா் காணொளி வாயிலாக ஆஜரானாா். அப்போது, இறுதி வாதங்களை கேட்ட சிறப்பு நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பினை ஒத்தி வைத்திருந்தார்.
இந்த வழக்கில் விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பெயரளவில் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும் தில்லி காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் பிப். 10 அன்று அறிவுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து இந்தப் படுகொலை வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்பியுமான சஜ்ஜன் குமார் குற்றவாளி என தில்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சஜ்ஜன் குமாருக்கான தண்டனை குறித்த விவரங்கள் வருகிற பிப்ரவரி 18 அன்று வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.