தீபிகா படுகோனுக்கு ஆதரவு இல்லையா? விராட் கோலியைப் போலவே தமன்னாவும் இன்ஸ்டாகிராம் மீது புகார்!
நடிகை தீபிகா படுகோன் குறித்த பதிவுக்கு தான் செய்யாமலே லைக் இடப்பட்டதாக இன்ஸ்டாகிராம் தொழில்நுட்பத்தின் மீது நடிகை தமன்னா குற்றம் சுமத்தியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் படத்தில் இருந்து தீபிகா படுகோனுக்குப் பதிலாக இளம் நடிகை த்ரிப்தி டிம்ரி நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சந்தீப் தீபிகா படுகோன் தனது பிஆர் அணியிடன் இணைந்து படத்தின் கதையை வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பாக வெளியான இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்றினை நடிகை தமன்னா லைக் செய்ததால் பரபரப்பானது. நடிகை தமன்னா இதனை மறுத்துள்ளார்.
தமன்னா லைக் செய்த பதிவில் இருந்தது என்ன?
நடிகை தீபிகா படுகோன் 2020இல் பேசிய விடியோவில் உங்களது கணவர் (ரன்வீர் சிங்) இந்தப் படத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளாரா? என கேள்வி கேட்கப்படும். அதற்கு தீபிகா, “இது என்னுடைய சொந்த பணம்” எனக் கூறுவார்.
மேலும், அந்த ரீல்ஸில் சில வரிகள் சேர்க்கப்பட்டிருக்கும். அதில் ‘அவர் எதற்குமே வீழமாட்டார் என்ற பிரசாரம் - அவமதிப்பு, ஆண், பாலியல், பாலின ஊதிய பாகுபாடு, அதிக நேரம் வேலை செய்தல், தொழில்முறையல்லாதல், ஆணாதிக்கம், இரட்டைத்தனங்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கும்.
இந்த விடியோவைத்தான் தமன்னா லைக் செய்திருக்கிறார். தீபிகாவுக்கு ஆதரவாக தமன்னா இருப்பதாக சமூக வலைதளத்தில் பேசுபொருளானதும் அந்த லைக்கை நீக்கியுள்ளார்.
சந்தீப் படத்தில் தீபிகாவுக்கு என்ன பிரச்னை?
ஸ்பிரிட் படத்தில் தீபிகா 6 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய முடியாது எனக் கூறியுள்ளார். மேலும், படப்பிடிப்பு 100 நாள்களைக் கடந்தால் ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனியாக சம்பளம் அளிக்க வேண்டுமெனக் கோரியதாக ஆங்கில ஊடகங்கள் கூறியுள்ளன.
தமன்னா மறுப்பு
இந்நிலையில், நடிகை தமன்னா இதனை மறுத்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் இது குறித்து தமன்னா கூறியதாவது:
தானாகவே எப்படி லைக் விழுகிறதென தயவுசெய்து இன்ஸ்டாகிராம் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் சிலர் அதைச் செய்தியாக்கி நான் அதற்காக பதிலளிக்க வேண்டியுள்ளது எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் இதேபோல விராட் கோலியும் இளம் நடிகையின் பதிவுக்கு லைக் செய்து சர்ச்சையானது. அதற்கு கோலி இன்ஸ்டாகிராமின் தொழில்நுட்ப கோளாறு எனக் கூறியதும் கவனிக்கத்தக்கது.
