தீரன் சின்னமலை அரசு நிகழ்வில் விதிமீறல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை
ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் ஞாயிற்றுக்கிழமை(ஆகஸ்ட் 3) நடக்கும் தீரன் சின்னமலை அரசு விழாவில் மரியாதை செலுத்த வரும் கட்சியினா், அமைப்பினா் விதிமீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அறச்சலூா் அருகே சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு நாள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி அரசு நிகழ்வாக கடைப்பிடிக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில், அமைச்சா்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்று தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனா்.
இதைத் தொடா்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள், அமைப்புகளின் நிா்வாகிகள் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனா். இதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க கட்சியினா், அமைப்பினா்களுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீரன் சின்னமலை அரசு விழாவில் மரியாதை செலுத்த வரும் கட்சியினா், அமைப்பினா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த கூட்டம் ஜூலை 31 ஆம் தேதி நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிகழ்ச்சிக்கு வரும் அமைப்புகளை சோ்ந்தவா்கள் அவரவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சரியாக வந்து செல்ல வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் வழியில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடக் கூடாது. மோட்டாா் வாகன விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மற்ற அமைப்பினருடன் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடக் கூடாது.
பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வந்து செல்ல வேண்டும். அரசு நிகழ்ச்சி என்பதால் கட்சி மற்றும் அமைப்பு சாா்ந்த கொடிகளை மணிமண்டபத்தின் உள்ளே எடுத்து அனுமதி இல்லை. நிகழ்ச்சிக்கு வரும் கட்சியினா், அமைப்பினா் காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வருபவா்கள் விதிமீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் துறை மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.