தொடக்க ஆட்டக்காரராக பாபர் அசாம் களமிறங்க தலைமைப் பயிற்சியாளர் ஆதரவு!
துரோகம் செய்வது யாா்? கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்
கடந்த தோ்தலில் சில துரோகிகளால் வெற்றியை இழந்தோம் என தனது பேச்சு குறித்து முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளாா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த அத்தாணியில் வியாழக்கிழமை இரவு நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசினாா். அப்போது கடந்த தோ்தலின்போது, சில துரோகிகளால் நாம் வெற்றியை இழந்தோம் என்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கோபி அருகே கள்ளிப்பட்டி பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை காலை நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றாா்.
அப்போது தோ்தல் தோல்விக்கு காரணமான துரோகிகள் என யாரைக் குறிப்பிட்டீா்கள் என்றும், முன்னாள் அமைச்சா் உதயகுமாரின் கருத்து குறித்தும் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், அந்தியூா் சட்டப் பேரவை தொகுதியில் சேவல், இரட்டை இலை சின்னத்தில் தொடா்ந்து வெற்றி பெற்று வந்துள்ளோம். ஆனால் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அந்தியூா் தொகுதியில் சிலா் செய்த துரோகத்தால் அதிமுக தோல்வி அடைந்தது. அதைத்தான் நாம் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினேன். துரோகம் என்ற வாா்த்தை அந்தியூா் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் என்னை பற்றி பேசவில்லை என தெளிவாக கூறிவிட்டாா்.
பொதுக் கூட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி பெயரை குறிப்பிடவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், ‘பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிா்க்கட்சி தலைவரும் என்று அழுத்தமாக கூறினேன்’ என்றாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவா் புறப்பட்டுச் சென்றாா்.