`பேபி, இனி உலகம் முழுவதும் பறக்கலாம்.!’ - சிறையில் இருந்தும் ஜாக்குலினுக்கு விமானம் பரிசளித்த சுகேஷ்
டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்களிடம் தான் அரசு அதிகாரி, அமைச்சருக்கு வேண்டப்பட்டவர் என்று கூறி மோசடி செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரை சிறையில் இருந்து ஜாமீனில் எடுப்பதாக கூறி 200 கோடியை தொழிலதிபர் மனைவியிடம் மோசடி செய்துவிட்டார். தமிழகத்தை சேர்ந்த டிடிவி தினகரனிடம் இரட்டை இலை சின்னத்தை வாங்கிக்கொடுப்பதாக கூறி சில கோடிகளை அபகரித்துவிட்டார். இப்படி அவரது மோசடிகள் நீண்டு கொண்டே செல்கிறது.
சிறையில் இருந்து கொண்டு மோசடி செய்த பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்த சுகேஷ், பாலிவுட் பிரபலங்கள், மாடல் அழகிகளை சிறைக்கு வரவைத்து அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார், பணமும் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/7djzxq18/118244465.webp)
அவரது வலையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விழுந்தார். இதனால் ஜாக்குலினுக்கு சுகேஷ் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பரிசுப்பொருட்களை வாங்கிக்கொடுத்தார். ஜாக்குலின் சுகேஷுடன் நெருக்கம் காட்டினார். சுகேஷ் தான் சிறையில் இருப்பதை மறைத்து ஜாக்குலினுடன் பழகி வந்தார். ஜாக்குலின் குடும்பத்திற்கும் சுகேஷ் கணிசமாக பண உதவி செய்து இருக்கிறார். இதனால் சுகேஷ் மீதான மோசடி வழக்கை விசாரித்த அமலாக்கப்பிரிவு, ஜாக்குலின் பெர்னாண்டஸிடமும் பல முறை விசாரணை நடத்தியது. அதோடு இவ்வழக்கில் ஜாக்குலினையும் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
இவ்வழக்கில் ஜாக்குலின் முன் ஜாமினில் இருக்கிறார். சுகேஷ் சிறையில் இருந்தாலும் அடிக்கடி ஜாக்குலினுக்கு கடிதம் எழுதி தனது காதலை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். ஏற்கனவே குதிரை, பூனை, கைப்பேக் என ஏராளமான பொருட்களை ஜாக்குலினுக்கு கொடுத்துள்ளார் சுகேஷ். ஆனால் அதனை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துவிட்டது. அதோடு ஜாக்குலின் பிறந்தநாளுக்கு அவருக்கு சொகுசு படகு ஒன்றை வாங்கிக்கொடுப்பதாக அறிவித்தார். மேலும் ஜாக்குலின் ரசிகர்கள் 100 பேருக்கு ஐபோன் வாங்கிக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டார். தற்போது காதலர் தினத்தையொட்டி ஜாக்குலினுக்கு தனி விமானத்தை வாங்கிக்கொடுத்திருப்பதாக சுகேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜாக்குலினுக்கு சுகேஷ் எழுதி இருக்கும் கடிதத்தில் சொகுசு விமானத்தை பரிசாக வழங்கி இருப்பதாகவும், அதில் உனது பெயர் எழுதப்பட்டு இருப்பதாகவும், உனது பிறந்ததேதி எண்ணின் பதிவு எண் பெறப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ``பேபி இனி படப்பிடிப்புக்காக உலகம் முழுவதும் எளிதாக வசதியாக பறக்க முடியும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அதோடு மறுஜென்மம் என்று ஒன்று இருந்தால் அதில் நான் உனது இதயமாக பிறக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். விமானத்தை வளைகுடா நாட்டில் பதிவு செய்துள்ளார் என தெரிகிறது.