தொடக்க ஆட்டக்காரராக பாபர் அசாம் களமிறங்க தலைமைப் பயிற்சியாளர் ஆதரவு!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக பாபர் அசாம் களமிறங்க வேண்டும் என அந்த அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் ஆக்யுப் ஜாவத் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் நான்கு நாள்களில் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது.
இதையும் படிக்க: ஆதிக்கத்துக்கு முடிவு..! ஒயிட்வாஷ் ஆனது ஆஸ்திரேலியா!
பாபர் அசாமுக்கு ஆதரவு
பிப்ரவரி 19 முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக பாபர் அசாம் களமிறங்க வேண்டும் என அந்த அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் ஆக்யுப் ஜாவத் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் பாபர் அசாமை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க ஆலோசித்து வருகிறோம். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் பாபர் அசாம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அதன் பின், சைம் ஆயூபுக்கு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக, டெஸ்ட் போட்டிகளிலும் பாபர் அசாம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.
இதையும் படிக்க: ஓராண்டில் 10 மாதங்களும் விளையாடினால் எப்படி? கபில் தேவ் விமர்சனம்
பாகிஸ்தானில் உள்ள ஆடுகளங்கள் தொடக்க வீரர்களாக களமிறங்குபவர்களுக்கு மிகுந்த சவாலானதாக இருக்காது. பேட்ஸ்மேன்களால் பவர் பிளே ஓவர்களில் நன்றாக ரன்கள் குவிக்க முடியும். பவர் பிளே ஓவர்களை எங்களது சிறந்த பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதனால், இந்த ஆடுகளங்களில் பாபர் அசாம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என நினைக்கிறேன். முக்கியமான போட்டிகளில் அவர் நன்றாக விளையாடிய அதிக ரன்கள் எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.