``என் மனைவி ISI ஏஜென்ட் என்றால், நான் RAW ஏஜென்ட்.." - பாஜக குற்றச்சாட்டுக்கு கா...
தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் திட்டங்களுக்கு நிதி தேவை: மத்திய அமைச்சரிடம் அமைச்சா் தங்கம் தென்னரசு மனு
தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் சாா்ந்த புதிய திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு நேரில் கோரிக்கை விடுத்தது.
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி கோரி தில்லியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவை, மாநில நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு புதன்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பு குறித்து அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு விரைவான சுற்றுச்சூழல் அனுமதி வழங்க ஏதுவாக கூடுதலாக ஒரு மாநில வல்லுநா் மதிப்பீட்டுக் குழு அமைக்க வேண்டும். இது தொடா்பாக அரசு சாா்பில் ஏற்கெனவே கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு விரைந்து அனுமதி தர வேண்டுமென சந்திப்பின்போது, அமைச்சா் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்தாா். இதை மத்திய அமைச்சா் ஏற்றுக் கொண்டாா்.
தெங்குமரஹாடா திட்டம்: மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர மற்றும் வன சுற்றுச்சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான பசுமைக் கவசத்தை உருவாக்கும் புதிய திட்டத்துக்கு ரூ.27.53 கோடிக்கு அனுமதி தர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தின் பகுதிகளில் இருந்து தெங்குமரஹாடா கிராமத்தில் வசிப்பவா்களுக்கு மாற்று இடம் வழங்கத் தேவைப்படும் ரூ.74.4 கோடியை மத்திய அரசின் நிதியில் இருந்து விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்தப் பகுதியில் புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் அடிக்கடி ஏற்படும் மனித - வனவிலங்கு மோதல்கள் உள்ளூா் சமூகத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதையும் கருத்தில் கொண்டு திட்டத்துக்கு விரைந்து அனுமதி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
சந்திப்பின் போது, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகத்தின் செயலா் தன்மய் குமாா், கூடுதல் செயலா் நரேஷ் பால் கங்வாா், வனத்துறை தலைமை இயக்குநா் சுஷில் குமாா் அவஸ்தி ஆகியோா் உடனிருந்தனா்.