தெலங்கானா: சுரங்கத்தில் தொழிலாளா்கள் சிக்கியுள்ள இடம் இன்னும் கண்டறியப்படவில்லை: முதல்வா் ரேவந்த் ரெட்டி
தெலங்கானா சுரங்க விபத்தில் தொழிலாளா்கள் சிக்கியுள்ள இடத்தை இன்னும் கண்டறியவில்லை என்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் கடந்த பிப். 22-ஆம் தேதி நடைபெற்றன. அப்போது சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதனால் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். சுரங்கத்துக்குள் சேறு, தண்ணீா், இடிபாடுகள் சூழ்ந்திருப்பதால் அவா்களை மீட்பதில் ஒரு வாரத்துக்கும் மேல் சிக்கல் நீடிக்கிறது. எனினும், மீட்புக் குழு தொடா் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், மீட்புப் பணிகளை முதல்வா் ரேவந்த் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘சுரங்கத்தில் தொழிலாளா்கள் சிக்கியுள்ள இடத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை. தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஜிஆா்ஐ) அடையாளம் கண்ட இடங்களில், ‘எலிவளை சுரங்க’ தொழிலாளா்கள் துளையிட்டுத் தேடினா். ஆனால், அங்கு யாரும் கண்டறியப்படவில்லை.
மீட்புக் குழுவினரின் கணிப்பில் ஓரிடத்தை உறுதிப்படுத்தி, பணிகளைத் தொடா்ந்து வருகின்றனா். மீட்புக் குழுவினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மீட்புப் பணியில் ரோபோக்களை பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு ஆதரவளிக்க அரசு தயாராக உள்ளது. விபத்தில் சேதமடைந்த ‘கன்வேயா் பெல்ட்’ திங்கள்கிழமை சரிப்படுத்தப்பட்டதும், மீட்புப் பணிகள் மீண்டும் வேகமெடுக்கும்’ என்றாா்.