தொகுதி மறுசீரமைப்பு: சென்னையில் மார்ச் 22-ல் மாநிலக் கட்சிகள் கூட்டம்!
தொகுதி மறுவரையறை : `ஒரு வாக்கு, ஒரு மதிப்பு; எதிர்காலம் காக்க..!’ - இரா.சிந்தன்| களம் பகுதி 2
எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’
இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது Delimitation - `தொகுதி மறுவரையறை’ விவகாரம். பல்துறைகளை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் தினம் ஒருவர் என அது குறித்து விரிவாக தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளார்கள்.
எழுத்து : இரா.சிந்தன், மாநிலக்குழு உறுப்பினர், சி.பி.ஐ(எம்)
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)
'தீ பரவுகிறது' – இப்போது நம் முன் உள்ள கேள்வி இதுதான். நெருப்பில் சுட்டு உண்போமா? நெருப்புக்கு நம்மை உண்ணக் கொடுப்போமா? எரிந்துகொண்டிருக்கும் கூரையைக் காக்கத் துடிக்கும் அதே அவசரத்தோடு இயங்குகிறது தமிழ்நாடு. இப்போது தீயாக நம்மை விழுங்கப்பார்ப்பது 'தொகுதி மறுவரையறை பிரச்சனை'.
இப்போது என்ன அவசரம்?
2021 ஆம் ஆண்டு நடக்கவிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், ஆண்டுகள் கடந்த பின்னரும் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு அறிவிக்கவில்லை. உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை தெரிந்துவிடும் என்பதுகூட காரணமாக இருக்கலாம்.
நாட்டின் பல திட்டமிடல் தேவைகளுக்கு இந்த கணக்கெடுப்பு அவசியம். ஆனால் ஒன்றிய அரசோ இந்த ஆண்டும் அதற்கான நிதியை ஒதுக்கவில்லை. எனவே மேலும் ஒரு ஆண்டு மக்கள் தொகை கணக்கீடு தள்ளிப்போகும் என்பது தெரிய வந்தது.

இனியும் ஓராண்டு இந்த கணக்கெடுப்பு தள்ளிப்போனால், அது தொகுதி மறுவரையறை செயல்பாட்டை 10 ஆண்டுகள் முன்கூட்டியே செய்வதை நோக்கி நம்மை தள்ளும். இந்த இடத்தில்தான் பிரச்சனை உருவானது (சாதாராண நடைமுறையில் சென்றிருந்தால் 2035 க்கு பின்னர் போயிருக்கும்). எனவே, பாஜக தன்னுடைய மறைமுக திட்டத்தை நோக்கி நாட்டை இழுத்துச் செல்கிறதோ என்ற சந்தேகம் அரசியல் பிரச்னையாக உருவெடுத்தது.
அப்படி என்ன திட்டம்?
பலவீனமான மாநிலங்கள், பலமான ஒன்றிய அரசு என்பதுதான் 'ஒற்றை ஆட்சி' கருதுகோளுக்கு அடிப்படை. இது பாஜகவின் சித்தாந்தம் ஆகும்.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், மாநில கட்சிகளின் ஒற்றுமையை பார்த்துவிட்ட பாஜக, மாநில கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்த வேண்டிய இடத்துக்கு சென்றுள்ளது. இந்த அனுபவத்திற்கு பின் பாஜகவுக்கு கூட்டாட்சி இந்தியா மேலும் கசப்பது அதிசயமல்ல. எனவே, தனது சித்தாந்த திசையில் வேகமாக செல்ல பாஜக தீர்மானித்தது. எனவேதான் அவர்கள் 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' என்ற திட்டத்தை வேகப்படுத்தினார்கள். மாநில கட்சிகளின் மீதான முரண்பாடுகளும் அதிகமாகின. நிதிக்குழுவுக்கு ஒன்றிய நிதியமைச்சகம் அனுப்பிய பரிந்துறை, மாநிலங்களுக்கான நிதியை 1% மேலும் வெட்டவேண்டும் என்று கூறியிருந்தது. செஸ் மற்றும் சர்சார்ஜ் போன்ற வரிகளின் சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
கூட்டணி தயவுடனே ஆட்சியில் இருந்துவரும் பாஜக, இந்த நிலைமையை பயன்படுத்தி 2026 ஆம் ஆண்டுக்கு பின் மக்கள் தொகை கணக்கீட்டை தள்ளிவிட்டால், அதன் பின்னர் தென் மாநிலங்களிலும், மாநில கட்சிகள் வலுவாக உள்ள பகுதிகளிலும் இருந்து வரக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சரிந்துவிடும். எனவே, திட்டத்தை எதிர்ப்பதுதான் அவசர அவசியமாக முன்வந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் எண்ணிக்கை குறையாதா?
ஆனால், தொகுதி மறுவரையறை செய்வது மிகச் சாதாரணமான நடைமுறைதான். அதன் மூலம் தமிழ்நாட்டுக்கு எம்.பி இடங்கள் குறையாது என்று பாஜகவின் தரப்பில் விளக்கம் தருகிறார்கள். ஆனால், இந்தியாவில் ஏற்கனவே 1951, 1961, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புகள் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.
அப்போது நாட்டில் 494 ஆக இருந்த மக்களவை இடங்கள், பின்னர் 522 மற்றும் 534 என உயர்த்தப்பட்டன. இதிலெல்லாம் மாநில இடங்கள் மக்கள் தொகை விகித அடிப்படையில் மாறி வந்தன. 1976-ல் கொண்டுவரப்பட்ட 42-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் மாநிலங்களைத் தண்டிக்கக் கூடாது என்ற வலுவான காரணத்துடன் தொகுதி மறுவரையறை செயல்முறையை ஒத்திவைத்தது.

பின்னர் 2002 ஆம் ஆண்டு, மாநில கட்சிகளின் தயவில் நடைபெற்ற ஒன்றிய அரசு, 2026 வரை கால நீட்டிப்பு செய்தது. இருப்பினும், பழங்குடி மக்கள், பட்டியல் சாதி மக்களின் தொகுதிகள் மட்டும் 2001 மக்கள் தொகை அடிப்படையில் பட்டியல் மாற்றப்பட்டன. மாநிலங்களுக்குள் தொகுதி வரையறையை மறுசீரமைக்கும் பணி மட்டும் மேற்கொள்ளப்பட்டன.
எனவே, உரிய அரசமைப்பு சட்ட திருத்தம் செய்யாமல் தமிழ்நாட்டின் இடங்கள் குறையாது என்றோ, ஒட்டுமொத்த விகிதாச்சாரத்தில் தமிழ்நாட்டின் அதிகாரம் குறையாது வெற்று வாய் வார்த்தைகளை வீசுவதால் தீர்வு கிட்டாது.
உண்மைப் புள்ளிவிவரங்கள் பேசுகின்றன!
நம் கண் முன்னே நடக்கும் இந்த மாற்றத்தின் அளவை புரிந்துகொள்ள, சில எண்கள் உதவும்:
1971 மக்கள்தொகை:
தமிழ்நாடு: சுமார் 4.5 கோடி (இந்தியாவின் மக்கள்தொகையில் 6%)
கேரளா: சுமார் 2.5 கோடி (இந்தியாவின் மக்கள்தொகையில் 3%)
உத்தரப் பிரதேசம்: சுமார் 10.5 கோடி (இந்தியாவின் மக்கள்தொகையில் 15%)
பீகார்: சுமார் 6.0 கோடி (இந்தியாவின் மக்கள்தொகையில் 8%)
2021 மதிப்பிடப்பட்ட மக்கள்தொகை:
தமிழ்நாடு: சுமார் 7.9 கோடி (இந்தியாவின் மக்கள்தொகையில் 5.9%)
கேரளா: சுமார் 3.5 கோடி (இந்தியாவின் மக்கள்தொகையில் 2.6%)
உத்தரப் பிரதேசம்: சுமார் 20.3 கோடி (இந்தியாவின் மக்கள்தொகையில் 16%)
பீகார்: சுமார் 12.7 கோடி (இந்தியாவின் மக்கள்தொகையில் 10%)
ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் இந்த மாநிலங்களுடைய மக்கள் தொகையை சதவீதமாகப் பார்க்கும்போது பெரிய மாற்றம் தெரியவில்லை. ஆனால், மிலன் வைஷ்ணவ், ஜேமி ஹின்ஸ்டன் ஆகிய ஆய்வாளர்கள் இந்த மக்கள் தொகை வளர்ச்சி அடிப்படையில் தொகுதி வரையறை நடந்தால் அதனால் என்ன மாற்றம் ஏற்படும் என கணித்து ஒரு ஆய்வறிக்கையை எழுதியுள்ளனர்.
அதன்படி, 2026-க்குப் பிறகு தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை இப்போது 39 ஆக இருப்பது, 31 ஆகக் குறையக்கூடும். கேரளாவில் 20 இருப்பது 12 ஆகும். மாறாக, உத்தரப் பிரதேசம், பீகார் இரு மாநிலங்கள் மட்டுமே கூட்டாக 21 தொகுதிகள் அதிகம் பெறும்.
ஒருவேளை, 2026 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை கூடுதலாக்கினால் உத்திர பிரதேசத்தில் 143, பீகாரில் 79, மத்திய பிரதேசத்தில் 52, ராஜஸ்தானில் 50 என அதிகரிக்கும். தமிழ்நாட்டிலோ 10 தொகுதிகள் மட்டும் அதிகமாகும். நாட்டின் நாடாளுமன்றத்தில் வடமாநிலங்களே ஆதிக்கம் செலுத்துவதாக நிலைமை மாறும்.
இந்த பிரச்சனையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் கண்டனக் கருத்துக்கு பதில் குறிப்பிட்டிருந்த பாஜக தலைவர் ஹெச்.ராஜா, "இப்போதுள்ள 543 இடங்களை 724 ஆக அதிகரிப்போம். இந்த முறையில் தமிழ்நாட்டுக்கு 52 இடங்கள் வரும்" என்று புதிய கணக்கீட்டை குறிப்பிட்டிருந்தார். இதை பாஜகவினர் புரோ-ராட்டா முறை என விளக்குகிறார்கள்.
ஆனால் நாம் இப்படியொரு சூத்திரத்தை மக்கள் பிரதிநிதிக்கு முன்வைக்க நாடாளுமன்றம் இருக்கும்போது, அங்கே ஏன் எல்லாம் மூடு மந்திரமாக மறைக்கப்படுகிறது? ரகசிய அமைப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் (ராஷ்டிரிய சுயம்சேவக் சங்) இந்த சூத்திரத்தை எங்கே உருவாக்கி ராஜாவிடம் கொடுத்தது? என்று கேட்க விரும்புகிறோம்.
பாஜகவினர் தங்களின் மறைமுக திட்டம் வெளிப்பட்டுவிட்ட பின்னணியில், சந்திரபாபு நாயுடுவை போன்ற சில கூட்டாளிகளை சமாளித்து உடன் வைத்துக் கொள்வதற்காகவே இந்த விகிதாச்சார கணக்கீட்டை போலியாக பரப்புகிறார்கள்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கூடுதல் இருக்கைகளுடன் கட்டப்பட்ட போது இந்த திட்டத்தை பாஜக வெளிப்படுத்தியதா? மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவில் தொகுதி மறுவரையை ஒரு நிபந்தனையாக சேர்க்கப்பட்ட போது பாஜக தன்னுடைய சூத்திரத்தை நாடாளுமன்றத்தில் வைத்ததா? ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற திட்டத்தில் வேகம் காட்டிய போதும் கூட பாஜகவின் தரப்பில் இருந்து இந்த பிரச்சனை பேசப்படவில்லையே? எதிர்ப்புக்குரல்கள் வலுப்பட்ட பின்னர் தானே பாஜகவினர் பதட்டத்தில் பலதும் பேசுகிறார்கள். இந்த வாய் வார்த்தைகளுக்கு சட்ட அதிகாரம் எதுவும் உள்ளதா?
தொகுதி மறுவரையறை பிரச்சனை உண்மையில் மாநிலங்களுக்கும், மாநில கட்சிகளுக்கும் எழுந்திருக்கும் சவால் மட்டுமே என்றால் நாம் இந்த பிரச்சனையில் அனைத்து கட்சிகள் முன்வைக்கும் தீர்மானத்தையே ஒரு தீர்வாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதுவொரு சாத்தியமான வாதக் கருத்துதான்.
கூடுதலான அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள், ஒவ்வொரு மாநிலமும் தனக்கான முடிவை தாமே எடுத்துக் கொள்ள முடியும் என்ற கூட்டாட்சி ஏற்பாடு வலுப்பட்டால்தான் தொகுதி மறு வரையறை குறித்து எழக்கூடிய அத்தனை சர்ச்சைகளுக்கும் நிரந்தரமான தீர்வு ஏற்படும். மாநில சுயாட்சி, தீர்வின் ஒரு அம்சம் ஆகும்.

தொகுதி மறுவரையரை செய்வதற்கு அடிப்படையாக சொல்லப்படும் 'ஒரு வாக்கு, ஒரு மதிப்பு' என்ற கருதுகோளை சீர்தூக்கி, வலுப்படுத்தும் போதுதான் இந்த பிரச்சனைக்கு உண்மையான தீர்வு கிடைக்கும். உண்மையில், இப்போதுள்ள நாடாளுமன்ற எண்ணிக்கைகள் கூட உண்மையில் ஒவ்வொரு வாக்கையும் சமமான மதிப்புள்ளதாக மாற்றவில்லை.
ஒரு தொகுதியில் 100 வாக்காளர்கள் இருந்தால் அதில் 70 பேர் வாக்களிக்கிறார்கள். அதில் 30 வாக்கு பெற்றவர் வெற்றிபெற்றால், 70 பேரால் அவர் நிராகரிக்கப்பட்டவராக இருக்கிறார். ஆனால் அவரே 100 சதவீதம் பேருக்கும் பிரதிநிதியாக அமைகிறார். இன்றைய தேர்தல் முறைப்படி தோல்வியடைந்த வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மதிப்பு இழக்கின்றன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி வேறு ஒரு கட்சிக்கு தாவினாலோ, கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக நடந்தாலோ அவரை திரும்ப அழைப்பதற்காக எந்த வழிமுறையும் நம்முடைய சட்டத்தில் இல்லை.
பாஜகவினால் புதிதாக முன் மொழியப்பட்டுள்ள 'ஒரே தேசம் ஒரே தேர்தல்' என்ற திட்டம் நடைமுறைக்கு வருமானால், மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வேட்பாளர்களை சந்திக்க முடியும். அவரே மக்கள் பிரதிநிதியாக மாறிவிட்டால், மக்களை சந்திக்க வேண்டும், வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும் என்ற எந்த கடப்பாடும் இல்லாதவராக ஆக்கப்படுகிறார்.
ஏற்கனவே, தேர்தலும் அரசியலும் கோடிக்கணக்கில் பணம் புழங்கக்கூடிய தொழில்களாக மாற்றப்பட்டு – மக்களின் தாக்கம் குறைந்த செயல்முறைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. எனவே, ஒரு வாக்கு ஒரு மதிப்பு என்ற திசையை நோக்கிச் செல்ல, மேற்சொன்ன அம்சங்களிலெல்லாம் தீவிரமான சீர்திருத்தங்களை நாம் கோர வேண்டியுள்ளது.

> சுயேட்சைகள், கட்சிகள் தமது கொள்கைகளை முன்னிருத்தி வாக்குகளை திரட்டக்கூடிய கலப்பு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை.
> கட்சிகள், வேட்பாளர்களை திரும்பப் பெறக்கூடிய எதிர் வாக்களிப்புக்கான வாய்ப்பு.
> பணபலத்தை மையப்படுத்திய தேர்தல் முறையை தீவிரமாக மாற்றியமைப்பது.
> அதிகாரப் பரவல் கொண்டதாக அரசியலமைப்பை சீர்திருத்தி அமைப்பது.
எனவே இந்த பிரச்சனை அரசியல் கட்சிகள், மாநில முதலமைச்சர்களின் பிரச்சனை மட்டுமல்ல. உண்மையில் இது மக்களின் அதிகாரத்தை அதன் உண்மைப் பொருளில் உறுதி செய்வதற்கான பிரச்சனை. எனவே, இந்த நெருப்பை நாம் தனலாக்கி கையிலேந்த வேண்டும். சாமானியர்களின் விரல்களின் நுணியை, மீண்டும் அதிகாரம் மிக்கதாக்க வேண்டும்.”
நாளை : களம் பகுதி 3 : `தொகுதி மறுவரையறை விசயத்தில் திமுக மலிவு அரசியல் செய்கிறது - பேரா.ப கனகசபாபதி, மாநில துணைத் தலைவர், தமிழக பாஜக
(தொடரும்..!)
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
