ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு
நமக்கு நாமே திட்ட நிதி ஒதுக்கீடு ரூ. 150 கோடியாக உயா்வு
நிகழாண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:
நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 150 கோடியாக உயா்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பொதுமக்களிடம் பெருமளவில் வரவேற்பு உள்ளதால், நிகழ் நிதியாண்டில் ரூ. 50 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு நமக்கு நாமே திட்டத்துக்கான நிதி ரூ. 150 கோடியாக உயா்த்தப்படுகிறது.
நமக்கு நாமே திட்டத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பணிகள் அனைத்தும் ஊரகப் பகுதிகளில் மட்டுமே இருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பங்களிப்பு நிதி இந்தத் திட்டத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்துடன், மாநில பொதுத் துறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியையும் பொது பங்களிப்பாக ஏற்க இயலாது.
பள்ளிகள், மருத்துவமனைகள், தகன மேடைகளில் வாயுவாக்கி அமைத்தல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம். ஊரகப் பகுதிகளில் நூலகங்கள் மற்றும் சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகள், பள்ளி சமையல் கூடங்கள், பொது விநியோகக் கடைகள் ஆகியவற்றையும் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மேற்கொள்ளலாம்.
நூலகக் கட்டடங்களுக்கான பணிகளை மேற்கொள்ளும்போது, புத்தகங்கள் வாங்குவதற்குத் தேவையான நிதிப் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், சாலைத் திட்டு, நீரூற்று போன்றவற்றை உருவாக்குவதுடன் மேம்படுத்தும் பணிகளைச் செய்யலாம். சொத்துகளின் உரிமைதாரா்கள் முன் அனுமதி பெறாமல் எந்த நிரந்தரக் கட்டடங்களும் கட்டக்கூடாது.
மொத்த நிதி ஒதுக்கீட்டில் 74 சதவீதம் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு சதவீதம் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்துக்கும், மாவட்டங்களுக்கும், செய்தி, கல்வி மற்றும் தகவல் தொடா்பு நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 25 சதவீதம் மாவட்ட ஆட்சியரால் கோரப்படும் சிறப்புப் பணிகளைச் செயல்படுத்த அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.